ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம்
காற்றது ஈசன் கலந்துநின் றானே.

English Meaning:
All Emanate From Him Alone

If directions cardinal are all of Siva,
Why speak of someone else, O! you men!
All smoke from Fire emanates,
All creation from our Primal Lord arises.
Tamil Meaning:
பொருள்களும், சொற்களும், சொற்கள் ஒடுங்குகின்ற இடமும் தனக்கு வேறாயினும் அவை தனக்கு உடலாய் நிற்க, அவற்றிற்கு உயிராய் நிற்பது எதுவோ, அது பெருந்தெய்வம். (முதற் கடவுள்.) அத்தகைய பெருந்தெய்வம் சிவனன்றிப் பிறிதில்லை. அஃது எங்ஙனம் எனின், சிவனே எல்லா உயிர்களிடத்தும் அவற்றின் உயிராகிக் கலந்து நின்று அவற்றைப் புரந்து வருகின்றான்.
Special Remark:
ஊற்றம் - பிறிதொன்றைத் தாங்கும் திட்பம். அஃது அதனையுடைய பொருளைக் குறித்தது. சொல் ஒடுங்குமிடம் நாதம். எனவே, `சொல்லும், பொருளுமாகிய இருவகை உலகங்களும் தனக்கு உடலாகத் தான் அவற்றுக்கு உயிராக் அவற்றைப் புரந்து வருவதே பெருந்தெய்வம்` எனப் பெருந்தெய்வத்தின் இலக்கணம் கூறப்பட்டதாம். `உடல் நிலை பெறுவது உயிரால்` என்பது வெளிப்படையாதலின், `இருவகை உலகங்கட்கும் உயிராவது பெருந் தெய்வம் எனவே, `உயிர்போல அவற்றை நிலைப்பிப்பது பெருந்தெய்வம்` என்றதாயிற்று. `அந்த இலக்கணத்திற்கு இலக்கியம் சிவபெருமானே` என்பதை நிறுவுதற்கு, ``காற்றது ஈசன் கலந்து நின்றானே`` என்றார். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை, நான்காம் தந்திரத் தொடக்கத்தில் அசபா மந்திரத்தால் நாயனார் விளக்கினார். அப்பரும், ``என்னுளே உயிப்பாய்ப் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``6 என்று அருளிச் செய்தார். ``காற்றது`` என்பதில் `அது` பகுதிப் பொருள் விகுதி. ``காற்றதன்கண்`` ஏழனுருபு விரிக்க. `மர வகைகளும் உயிர்க்கின்றன` என இக்கால அறிவியலார் கூறுவர். முதல் அடியை இரண்டாம் அடியின் பின்னர்க் கூட்டி, அதன்பின் `என்னையெனின்` என்பதும், இறுதியில் `ஆகலின்` என்பதும் வருவித்து முடிக்க. இடையிலும் `உடலாக, உயிர்` என வேண்டும் சொற்கள் வருவிக்க. இதனுள், ``ஈசன்`` என்றது `சிவன்` என்றதேயாதல் வெளிப்படை. ``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினு மில்லை``7 என முதற்கணே கூறினார்.
இதனால், முதற்கண்கூறிய சிவனது முதன்மை வலியுறுத்திப்புகழப்பட்டது.