ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

English Meaning:
She is Kindred of Jiva

She is learning above all learning,
She is beginningless Vedas,
This they know not;
She is creation and its diversities,
She is Tattvas,
She is Primal One,
She is kindred of Jiva,
Thus She assured me.
Tamil Meaning:
`பிறப்புக்கள் பலவும், பலவேறு வகைப்பட்ட ஏனைப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய தத்துவங் களுமாய் ஆதி சத்தி ஒருத்தியே நிற்பாள்` என்று ஆவுருவாய் நிற்கும் பெரு மாட்டி எனக்கு அறிவித்தாள். எல்லா நூல்களிலும் மேம்பட்டதும், தனக்கு ஒரு முதல்நூல் இன்றித் தானே முதல் நூலாய் நிற்பதுமாகிய வேதம் சொல்லிய முறையும் இதுவே என்பதைப் பலர் அறிந்திலர்.
Special Remark:
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `வேதம் ஓதிய வண்ணமேயாம் என்று அறிகிலர்` என முடிக்க. வேதப் பொருளின் சிறப்பை உணர்தற்கு, ``கலையின் உயர்கலை, ஆதி இல்` என்பவற்றை விதந்து ஓதினார். `சாதி, பிறப்பு` என்பன ஒருபொருட் சொற்கள். இவை இங்கு உடம்பைக் குறித்தன. ``தத்துவம்`` என்பதில் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. ``ஆவின் கிழத்தி`` என்பதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. நாயனார் எழுந்தருளியிருந்த ஆவடுதுறையில் அம்மை ஆவுருவாய் வந்தமை வெளிப்படை. இத்தொடர்க்கு இதுவே பொருளாதல், வருகின்ற மந்திரத்தாலும் அறியப்படும்.
இதனால், `சத்தி மேற்கூறிய மூன்று நிலைகளில் `ஆதி` என்னும் நிலை ஒன்றில் நின்றே அனைத்துக் காரியங்களையும் செய்வள் என்பதே வேதம் முடிபாதலை அறிதல் திருவருளானே கூடும்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பல தெய்வக் கொள்கை. பக்குவம் இல்லாதாரை நோக்கி அமைந்தன என்பதாம்.