ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

English Meaning:
She Reveals Siva

The Mother of lovely tresses
Of arched eye-brows,
Her eyes are like blue water-lily
She is ambrosial Bliss-Beauty (Ananda Sundari)
She does reveal Supreme Siva to us.
Tamil Meaning:
`அழகிய கூந்தல், வளைந்த புருவம்` நீல நிறத்தை உடைய குவளை மலர்போலும் கண்கள்` களிப்பைத் தருகின்ற இனிய அமுதம் போன்ற ஆனந்தமே உருவான அழகிய வடிவம், இவைகளை உடைய வயிரவியே எப்பொருட்கும் மேலான சிவத்தை உயிர்கட்கு வெளிப்பட்டுத் தோன்றச் செய்தாள்.
Special Remark:
`சத்தி வழியாக அன்றிச் சிவத்தை நேரே காணுதல் இயலாது` என்பது தோன்ற, நேரே சென்று காணுதலினின்றும் பிரித்த, `சுந்தரியே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. அவ் ஏகாரத்தை இரட்டுற மொழிந்து தேற்றேகாரமாக்கி, `உலகப் பயனைத் தருகின்ற வயிரவியே மெய்ப் பயனையும் தருகின்றாள்` என்பது கொள்க. மெய்ப்பயன் கருதி வழிபடுவோர் அவளைச்சாந்த ரூபியாகக் கண்டு வழிபடுக என்பார், ``கோலக் குழலி`` என்பது முதலாக உடம் பொடு புணர்த்துக் கூறினார்.
இதனால், வயிரவியையே சாந்த ரூபியாகக் கண்டு வழி பட்டுப் பேரின்பத்தினைப் பெறுதல் கூடுவதாதல் கூறப்பட்டது.