ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.

English Meaning:
Triple Blessings of Bhairavi

She is the Primal Bhairavi,
She is the Virgin in Kundalini,
Those who rouse Her,
Will be body, soul and God in one;
Snapped will be the cycle of births here below;
A form, comely beyond words,
Will theirs be.
Tamil Meaning:
தென்கோடியாகிய குமரித்துறையில் நிலைபெற் றிருப்பவளும் எப்பொருட்கும் ஆதியுமாகிய வயிரவியைத் துதித்தும், தியானித்தும் நின்றால், உடலில் உள்ள உயிர் சிவமாகும். அறியாமை பொருந்திய இவ்வுலகில் பலவாறு பிறக்கும் பிறவிகள் ஒழியும். அவளது வடிவு எண்ணிறந்த வகையினது ஆகலின், அஃது ஒன்றாயே இருத்தல் கூடுமோ!
Special Remark:
எவ்விடத்தும் சிவமும், சத்தியும் பிரிப்பின்றியிருப் பினும், சிலவிடத்துச் சிவத் தன்மையும், சிலவிடத்துச் சத்தித் தன்மை யும் முனைந்து தோற்றும். அவ்வாற்றால் வடக்கில் கயிலைமலை, சிவ மலையாகின்றது. அதுபோலத் தெற்கில் `குமரி` என்னும் மலை சத்தி மலையாய் இருந்தது. காலவேறுபாட்டால் அம்மலையைக் கடல் தன்னுள்ளே அகப்படுத்து வடக்கில் மிகப்பரந்து நின்றமையின், அதன் வடகரையில் சத்திகுமரியாய் எழுந்தருளியிருக்க, அக் கடல் முனை யும் `குமரி முனை` எனப் படுவதாயிற்று. அவ்விடம் சிவனுக்குக் கயிலைபோல, உமைக்கு மிகச் சிறந்த இடமாதலை உணர்த்தற்கு வயிரவியை, ``கன்னித் துறைமன்னி`` என்றார். இறையன்புடையோர் யாவரும் கயிலையை அணுகிக் காணலையும், குமரி தீர்த்தத்தில் (கடலில்) முழுகுதலையும் ஒருபெற்றியவாக மேற்கொள்ளல் இன்றும் நிகழ்வது. இதனால், ஒரு கருத்துப் பற்றிச் சிவனை, மேல், (1061, 62) ``தென்னன்`` எனக் குறித்த நாயனார், தேவியை இங்கு, ``கன்னித் துறை மன்னி`` என்றார். பின்னரும், (1088) ``இனிய தென்மூலை இருக்கும் குமரி`` என்பார். ``நல் ஆவடு தண்டுறை ஆவின் கிழத்தி`` (1105) எனவும் கூறுவார். பாயிரத்திலும், ``சிவன் ஆவடு தண்டுறை சீருடையாள்`` (17) என்றார். ``மன்னி`` என்பது பெயர். இதில் ஐயுருபு தொகுத்தலாயிற்று. கன்னித் துறையைப் பிறரெல்லாம் உருவகமாக்கித் தாம் தாம் வேண்டும் பொருளை உரைப்பர். `சத்தியது வடிவு ஒன்றாகாது பலவாதல் செயல் வேறுபாடு நோக்கியாதலின், அவற்றை அவ்வாறே கொள்க` என்பார், ``ஓத உலவாத கோலம் ஒன்றாகுமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை வினா. இதனால், வயிரவி சிவ சத்தியேயாதல் இங்கும் தெளிவிக்கப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாடு வீடுபேற்றினையும் தருதல் கூறப்பட்டது.