ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

English Meaning:
Meditate on Her for 27 Days

She is the Treasure of Blessed Nandi, the Pure One;
Meditate on Her for a month of days twenty seven;
And reach the centres of Fire; Sun and Moon within
He who thus firm in meditation stands
Becomes Siva Himself.
Tamil Meaning:
இருபத்தேழு நாட்களைக் கொண்ட மதியளவை (சாந்தரமான) மாதம் ஒன்றுகாறும் அகத்தும், புறத்தும் வளர்க்கப் படுகின்ற ஓமாக்கினியே வயிரவி வடிவமாகும். அதனைப் பகல் இரவு இடைவிடாது ஓம்புகின்ற மன உறுதியுடையவன் `சிவனே` என எண்ணத்தக்கபெருமை யுடையவனாவன்.
Special Remark:
``புண்ணிய நந்தி, புனிதன்`` என்றவை, ``சிவன்`` என்ற வாறு. அவனது திரு, சத்தி. இங்கு வயிரவி ``எண்ணிய ... ... வன்னி, புண்ணிய ... ... ... திரு ஆகும்`` எனக் கூட்டியுரைக்க. ``பகலோன், மதி`` என்றது அவர்கள் விளங்கி நிற்கும் பகலும், இரவுமாகிய காலத்தைக் குறித்தன. ``நாளின் தொடக்கம் பகலவன் தோற்றமும், இறுதி மதியின் மறைவும்` என்னும் பொது முறை பற்றி ``மதியீறு`` என்றார். `மதியீறாக அதனை (அவ்வன்னியை)ப் பண்ணும் திண் ணியன்` என்றார். ``பண்ணிய வன்னி`` எனப்பொதுப்படக் கூறி யதனால், அகத்தும், புறத்தும் பண்ணுதல் கொள்ளப்பட்டது. அவ்வாறு பண்ணும் முறை மேலெல்லாம் சொல்லப்பட்டது. வடக்கில் கயிலைச் சிகரமாகிய ஓரிடத்தில் அரிதிற்காண இருக்கின்ற சிவன், தென்னாட்டில் அளவற்ற கோயில்களில் எளிதிற் காண இருத்தலால் அவனை, `தென்னன்` எனத் தமிழாகமம் கூறிற்று என்க. வாதவூரடிகளும் சிவனை இவ்வாறு கூறுதல் இது பற்றியே எனக் கொள்ளலுமாம்.
இதனால், வயிரவி வழிபாட்டில் சிறப்புடையது ஒன்று கூறப் பட்டது.