ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.

English Meaning:
Fourteen Mantras

Twelve are Kalas of Primal Bhairavi,
To the Twelfeth letter ``Ai`` denoted,
Add ``A``; and ``M`` letter denoting Maya;
Thus with letters Twelve and Two
From Om to Aim they fourteen are
That Her Mantras
To end of Kalas Sixteen lead.
Tamil Meaning:
பன்னிரு கலைகளை உடையதாகச் சொல்லப்படு கின்ற ஓங்காரத்தில் நாத விந்துக்களைப் பாவித்து, அதன் பின் ஆதி யாகிய வயிரவியது மந்திரத்தில் முதல்எழுத்து அகாரம் முதலிய வற்றில் பன்னிரண்டாம் எழுத்தாகிய `ஐ` எனவும், ஈற்றெழுத்து அவற்றில் பதினான்காம் எழுத்தாகிய `ஔ` என்பது பதினாறாம் எழுத்தாகிய விசர்க்கத்தோடு கூடியது எனவும் அறிந்து அவ்வாறே ஓதிப் பயன் பெறுக.
Special Remark:
``பன்னிரண்டாம் கலை`` என்பதில் `கலை` சினையாகு பெயராய் அவற்றையுடைய ஓங்காரத்தைக் குறித்தது. ஓங்காரமே பிராசாத கலைகளாய் விரிந்து நிற்பதாதல் அறிக. `கலையின்கண்` என ஏழாவது விரித்து, அதனை, ``கற்பித்து`` என்பதனோடு முடிக்க. அகாரம் - நாதம். எனவே, மாயை சுத்த மாயையாயிற்று. ``ஆதி பயிரவிதன்னில்`` என்பதை மூன்றாம் அடியில் முதலிற் கூட்டுக. பயிரவியது மந்திரத்தையே ஒற்றுமை பற்றி, `பயிரவி` என்றார். `பயிரவி தன்னில் ஆதி பன்னிரண்டோடு, அந்தம் அந்தப் பதினாலு சோடசமும் சொல்நிலை என்று ஓதிடு` எனக் கூட்டி வினைமுடிவு செய்க. `ஓடு` `உம்` என்பன எண்ணிடைச் சொற்கள். இங்ஙனம் கூறியதனால், `ஹோம் ஹைம் ஹௌ: பைரவ்யே நம:` என்பதே வயிரவி மந்திரமாதல் பெறப்பட்டது. தொடக்கத்தில் கூறப்பட்ட பொருளாகிய இது பற்றியே இவ்வதிகாரம், `வயிரவி மந்திரம்` எனப் பெயர் பெற்றது என்க. `பைரவ்யே நம:` என்பது `பயிரவிதன்னில்` என்பதனானே விளங்கிக் கிடந்தது. `வயிரவி` என ஓதாது, ``பயிரவி`` என ஓதியதும் இதன் பொருட்டு.
இதனால், வயிரவியது முதனிலை (மூல) மந்திரம் உணர்த்தப் பட்டது.