ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின் றேனே.

English Meaning:
She Slumbers in the Heart

From among the Nadis three,
In central Sushumna,
In threadlike slenderness,
She as Virgin Kundalini stood;
She is summum bonum of virtues all;
On Her feet She wears golden anklet,
That in rhythmic music sings;
Thus She entered my heart,
And there slumbers.
Tamil Meaning:
`இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளுள் நடுவிலே ஓங்குகின்ற நாளம் போல்வதாகிய சுழுமுனை நாடியுள்ளே பொருந்தி நின்ற, இளையவளும், கன்னிகையும் ஆகிய சத்தியது பாடகம் அணிந்த சிறிய பாதத்திலே உள்ள பசிய பொன்னா லாகிய சிலம்பினது ஒலி அந்த நாடிக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக் கவும் அதனைக் கேட்கமாட்டாமல் உறங்குகின்றேன் என்றால், எனது அறியாமையை என்னென்பது.
Special Remark:
``ஊடகம்`` என்பதை, `அகத்தூடு` என மாற்றிக் கொள்க. ``மேவி`` என்பது `மேவ` என்பதன் திரிபு. `மேவியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `உறங்குகின்றாளே` என்பது பாடம் ஆகாமை. அடுத்த மந்திரத்தின் முதலடியால் விளங்கும். `உயிரின் உறக்கத்திற்குக் காரணம் குண்டலியின் உறக்கமே` என்பது மேல் பலவிடத்தும் கூறியவாற்றால் அறியக் கிடத்தலின், அதனை இங்கு உய்த்துணர்ந்து கொள்ள வைத்தார். எனவே, `யோக முயற்சியால் மூலாக்கினியை எழுப்பி, அதனால் குண்டலியைத் துயில் உணரச் செய்தவழியே அச்சிலம்பொலியைக் கேட்டல் கூடும்` என்பது போந்தது. அங்ஙனம் கேட்குமாறு நடு நாடியிற் பொருந்தியிருத்தலே சத்தியானவள் உயிருக்கு அளிக்கும் கருணையாதல் விளங்கும்.