ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.

English Meaning:
She is End of Vedas

She is the Cause Supreme,
She is in Japa, Mantra chanting
She is in Yoga, in Flower Lotus seated
Of those who control their breath
In Puraka, Kumbhaka, Rechaka,
She is Narayani
She is the End of Vedas
That Nandi in compassion to world revealed.
Tamil Meaning:
தூலம், சூக்குமம் முதலாக வகுத்துச் சொல்லப் படுகின்ற மந்திரங்களுள் காரண மந்திரத்தை ஓதுவோரது உள்ளக் கமலத்தில், பூரக கும்பக இரேசகங்களாகின்ற பிராணாயாமத்தால் விளங்கி நிற்கின்ற சத்தி, சத்தனாகிய சிவனது நடுவில் உள்ளவளாய் இருப்பாள். இவ்வாறு சொல்லுகின்ற வேதப் பகுதி வேதத்தின் முடிவாய் விளங்குவதாம்.
Special Remark:
`பூரகம், கும்பகம், இரேசகம்` என்பன திரிவுபெற்று நின்றன. `இரேசகத்தால்` என உருபு விரிக்க. ``நடு`` என்பதன்பின், ``இருப்பாள்`` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதனுள், ``மந்திரம்`` என்றது பஞ்சாக்கரத்தை. ``காரணம்`` என்றதும், மகா காரணமாம். அஃது ஒன்பதாந் தந்திரத்தில் பஞ்சாக்கர பேதங்களைக் கூறுமிடத்து ஈரெழுத்தின் ஈரடுக்காக எடுத்தோதப்படுதல் காண்க. அதன்கண் சத்தி சிவத்தின் நடுவிலும், சிவம் சத்தியின் நடுவிலும் இருப்பினும் இங்கு இயைபு பற்றிச் சத்தி சிவத்தின் நடுவில் இருத்தலையே குறித்தார். ஓதுபவரது வினை அவரது உள்ளத்தின்மேல் ஏற்றப்பட்டது.
``உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீஇருத்தி`` 1
என்பது இம் மகாகாரண பஞ்சாக்கரத்தின் மேலும்,
``அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்``
என்பது மூன்றெழுத்தாய் நின்று அடுக்கிவரும் காரண பஞ்சாக் கரத்தின்மேலும் நோக்குடையன என்றல் மரபு. இதனின் மிக்க மந்திரம் இன்மையின் இதனைக் கூறும் உபநிடதமே வேத முடிவாகும் என்றார். மகாகாரண பஞ்சாக்கரத்தைச் சத்தி பரமா ஓதுங்கால் சத்தியெழுத்தை நெடிலாக ஓதுதல்வேண்டும் என்பது உய்த்துணர்ந்து கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாட்டின் மந்திரங்களுள் தலையாயது கூறப்பட்டது.