ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

English Meaning:
How Bhairavi is Seated

In the centre of the eight petalled lotus
Is Supreme Sakti, Arya, the Noble One seated;
Eight the Virgin Saktis
Four and Sixty the fair damsels surround Her,
So encircling,
They envisioned Her Glory.
Tamil Meaning:
விரிந்துநின்ற ஒரு தாமரை மலரின் எட்டிதழின் நடுவில் (பொகுட்டில்) மேலான சத்தி ஒருத்தி இருக்கின்றாள். அவ் எட்டிதழ்களில் கன்னியர் எண்மரும், அவருள் ஒருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் பணிமகளிரும் அங்குச்சூழ்ந்து பணிபுரிந்து அந்தச் சத்தியைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.
Special Remark:
இவளே `மனோன்மனி` எனப்படுபவள். நான்கு திசை யிலும் திசைக்கு இரண்டாக உள்ள எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக முறையே `வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத தமனி` எனச் சொல்லி, எண்மர் கன்னியரை அறிக. பாரித்தல் - சூழ்தல். `சரித்து` என்பது முதல் நீண்டது. இதன்கண் கூறப்பட்ட தாமரை மலர் வடிவத்தையும், அதன்கண் இருக்கும் முதற்சத்தி ஒருத்தி பரிவாரசத்தி எண்மர் ஆகியோரைக் கீழ் உள்ளவாறு கண்டுகொள்க.
சிவனைப் பூசித்தற்குரிய பதுமாசனத்தின் அமைப்பு ஆகமங் களில் ஆங்காங்கு வேறு வேறுவகையாகச் சொல்லப் படுகின்றது. அவற்றுள் இங்குக் கூறிய எட்டிதழ்களும் சுத்த வித்தை ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் கூடியவையாம். ஆகவே, இதன் பொகுட்டு முதலியன ஏனைச் சிவத்தத்துவங்களும், இதன் தண்டு ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம். இதனை, அகத்தே பாவிக்கும் பொழுது தண்டினைக் கொப்பூழ் அடி முதலாகவும், மலரை இருதயத் திலும் கொள்ள வேண்டும். மனோன்மனியே இங்குப் பூசிக்கப் படுவள். ஏனையோர் அவளுக்குப் பரிவாரமும், பரிவாரங்கட்குப் பரி வாரங்களும் ஆவர். சிவ வழிபாட்டு முறையே சத்திக்கும் ஆதலின், அதனை இங்குக் கூறினார். இதனானே, எந்தச் சத்தியை யார் வழி படினும் வழிபடப்படுபவளைத் தலைவியாகப் பொகுட்டில் வைத்துப் பரிவாரங்களை இதழ்களில் நிறுத்திப் பூசித்தல் வேண்டும் என்பது கொள்ளப்படும்.
இதனால், சத்தியை அகத்தும், புறத்தும் ஆசனத்தில் வைத்து வழிபடுமாறு கூறப்பட்டது.