ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

English Meaning:
She Consoles in Soft Speech

Of sweet speech is She;
By rare tapas reached She can be;
Of maiden innocent speech is She;
Jewelled in precious stones is She;
Attired in fine dresses is She;
Those who seek Her Holy Feet;
Saying ``You are our Refuge,``
She the Goddess
In soft speech consoles.
Tamil Meaning:
`சத்தி தனது திருவடியையே தஞ்சமாகக் கருதிப் போற்றுபவர்க்கே அருள்புரியும் இறைவியாவாள்` என்று அறிந்தோர் சொல்லுவர்.
Special Remark:
முதல் இரண்டு அடிகள் சத்தியின் இயல்புகளை விரித்தவாறு. ``அஞ்சொல் மொழி, செஞ்சொல் மொழி`` என்பவற்றை, ``இடைச்சொற் கிளவி, உரிச் சொற்கிளவி`` 1 என்றாற்போலக் கொள்க. சத்தி தவம் செய்தல், ஆட்டுவான் ஆடிக்காட்டுதல் போல்வதாம். செஞ்சொல் - என்றும் செவ்வே நிற்கின்ற (மாறுபடாத) சொல். மடப்பம் - இளமை; இது பெண்மையியல்பு. சீர் - அழகு. சேயிழை - நன்கமைந்த ஆபரணம். மடமொழி, சேயிழை என்பன அன்மொழித் தொகைகள். இன்சொல், அருளின் அடையாளம். `போற்றுவார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. போற்றுவார்க்கு அருளல் கடனாதலின், பிறர்க்கு அருளாமை கோட்டமன்றாம்.
``சலமிலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` 2
எனவும்,
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்`` 3
எனவும் போந்தவற்றையும் காண்க.
இதனால், `சத்தியைப் போற்றுகின்றவரே, அவளது அருளைப் பெறுதற்கு உரியர்` என்பது கூறப்பட்டது.