ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

உரைத்த நவசக்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

English Meaning:
Nandi Laid Down Laws of Japa

Of Nine Saktis said above
The One is at the Crown,
Counting them in order appropriate
Nandi laid down laws and rules of Japaway
He who of yore expounded
The ways of yoga-eight limbed.
Tamil Meaning:
``மேல்,`` ``பூரித்த பூவிதழ்`` (1067) என்னும் மந்திரத் திற் சொல்லப்பட்ட ஒன்பது சத்திகளுள் இறுதியதாகிய `மனோன்மனி` என்ற ஒன்று முடிவாய் நிற்க. மற்றைய எட்டினையும், வரிசைப்பட்ட எட்டு இடங்களில் வைத்துஒன்றன்பின் ஒன்றாக முறையே எண்ணிப் பிராசாத கலைகள் பன்னிரண்டில் இறுதி எட்டோடும் அவற்றை முன்னே கூறிய நந்திபெருமான், அவ்வாற்றானே வரிசைப்பட நியமிக்கப்பட்ட முறையில் வழிபாட்டு முறையை ஆக்கியருளினார்.
Special Remark:
`ஆதலின் அங்ஙனமே அச்சத்திகளை வழிபடுக` என்பது குறிப்பெச்சம். இராசி - இடம். `இராசிக்கண்` என ஏழாவது விரிக்க. ``நெடுமுறை` என்பது, `நெடுங்கணக்கு` என்பது போல இடை யில் ஒன்று விடாது கூறுதலைக் குறித்தது. `பிராசாதம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `பிரைச்சதம்` என்பதும் பாடம். `பிராசாதம்` என்றது அதன் கலைகளை, இங்குக் குறிக்கப்பட்டது, துவாதச கலாப் பிராசாதமே, அதன் இறுதி எட்டுக்கலைகளாவன உன்மனைக்குக்கீழே உள்ளனவாம். அவை, `விந்து, அருத்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, சமனை என்பன. `இவற்றிற்கு உரிய இடங்கள் ஆஞ்ஞை முதலாக மேலே உள்ளவை` என்பதை முன்னைத் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத் தொடக்கத்தே விளங்கக் கூறினோம். கிழக்கு முதலாக ஒரு திக்கிற்கு இரண்டாக உள்ளன என மேற்காட்டிய எட்டிதழ்களில் வாமை முதலிய எட்டுச் சத்திகளையும், பொகுட்டில் மனோன்மனியையும் வைத்து எண்ணுங்கால் விந்து, முதலிய பிராசாத கலைகளோடு ஒன்றுபட வைத்து எண்ணுதல் வேண்டும் என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இவ்வாறு எண்ணு தலால் சத்தி வழிபாடு பிராசாத யோகமாயும் அமையும் என்பது கருத்து. `எட்டோடும் நிரைத்து` என்க. நியதி - நியமிக்கப்பட்டமுறை. நியமம் - வழிபாட்டுமுறை, செய்தான் - ஆக்கினான். சத்தியை அஃறி ணையாகக் கூறுதலும் உண்மையின் இங்கு அவ்வாறு கூறப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாட்டினைப் பிராசாத முறையிற் செய்யின் சிறப்பாதல் கூறப்பட்டது.