ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.

English Meaning:
Mudra for Japa

In counting Mantra by way of Japa
Commence not with little finger
Going to third in traditional way;
That you now reverse,
And seek Her;
The Mother of Tamil,
This Nandi revealed as Truth
Of Japa of Saktis Nine.
Tamil Meaning:
கைகளில் மோதிரவிரல், சிறுவிரல் முதலாகத் தொடங்கி வலமாகப் பெருவிரலின் நுனியால் வரைகளைத்தொட்டு உருவை எண்ணி நடுவிரலில் முடிக்கும் வகையால் மீள மீள உருவேற்றப்படும் தமிழ்மந்திரம் முதலிய மந்திரங்களை அவ்வவற்றிற் குரிய தெய்வங்களாகவே தெளிந்து வழிபடுங்கள்; (பயன் விளையும்.) இதனை எங்கள் நந்திபெருமான் நான் உணரும் வண்ணம் உரைத்தருளினார்.
Special Remark:
நடுவிரலிற் சிறியவாதல்பற்றி மோதிரவிரலையும் `சிறுவிரல்` எனப் பொதுப்படக் கூறினார். எனவே, `தீரச் சிறியவிரல்` எனக் கூறவில்லை என்க. கையில் உள்ள ஐந்து விரல்களில் பெருவிரல் எண்ணுவதும், ஏனை நான்கு விரல்களும் எண்ணப்படுவனவுமாய். நிற்கும். ஒவ்வொரு விரலிலும் மும்முன்று கீற்றுக்கள் உள; எண்ணப் படும் விரலின் வரைகள் பன்னிரண்டில் நடுவிரலிலும், மோதிர விரலிலும் உள்ள நடுக்கீற்று இரண்டும் எப்பொழுதும் தீண்டப்படா. `அவையிரண்டும் சிவமும், சத்தியும்` என்பர். அவை ஒழிய ஏனைப் பத்துக் கீற்றுக்களை மோதிரவிரலின் அடிக்கீற்று முதலாகத் தொடங்கி வலமாகச் சுற்றிவந்து நடுவிரலின் அடிக் கீற்றில் முடிக்க உளவாகின்ற உருக்கள் பத்தாம். இவ்வாறு பெருவிரலின் நுனியால் மீள மீளச் சுழன்று எண்ண உருக்கள் பலவாக ஏறும். `எட்டு` என்னும் உருவும் உண்மையில் பத்தாகவே எண்ணப்படும். அவ்வாறு எண்ணப்படுத லால் இடையில் நிகழ்ந்த குறை நிரம்பும் என்பது கருத்து. இனி எட்டு வேண்டியவிடத்துச் சிறுவிரலின் அடி தொடங்கிச் சென்று சுட்டு விரலின் அடிக்கண் முடித்தல் வேண்டும் என்பாரும் உளர்.
செபமணியிலன்றிக் கைவிரல்களால் மந்திரங்களைக் கணிக்கும் வகையில் பலவேறுமுறைகள் பலவிடத்து உள்ளன. அவற்றுள் ஒன்றனை நாயனார் விதந்தார்.
`மேற்கூறிய பத்துக் கீற்றுக்களோடு பெருவிரலில் இரண்டு கீற்றுக்களைக் கூட்டிப் பன்னிரண்டு பன்னிரண்டாக ஒன்பது முறை கணிக்க நூற்றெட்டு உருவாகும் என்பாரும், `சிறு விரலின் அடி தொடங்கிப் பெருவிரலின் ஒரு கீற்றேகொண்டு நடுவிரல் அடிமுடியப் பத்தாகும்` என்பாரும் இங்ஙனம் பலதிறத்தர் கிரியையாளர் என்க.
தமிழ் மொழியிலும் மந்திரம் உண்மையை வலியுறுத்துபவர் இந் நாயனார் ஆதலின் ``செந்தமிழாதி`` என்றார். ``செந்தமிழாதி மந்திரங் களை` என்க. ``தமிழ்`` என்பது அதனாலாகிய மந்திரத்தைக் குறித்தது.
தமிழ்ச் செய்யுட்கே இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர் அதன் செய்யுட்களை ஏழாகவகுத்து, `அவற்றுள் ஒன்று மந்திரம்` எனக்கூறி,
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப`` 1
என நூற்பாச் செய்வாராயின், அந்நூற்பாவினுள் ``மந்திரம்`` என்றது வடமொழி மந்திரமே என உரைத்தல் உரையாதல் எங்ஙனம்? இந்நூற் பாக் கூறும் மந்திரம் தமிழ் மந்திரமே என்பதில் உரையாளர் யாவரும் ஒத்த கருத்தினர் ஆதலை அவர் உரைநோக்கி உணர்ந்து கொள்க. நவம் - புதுமை; அஃதாவது முன்னர் அறியாதிருந்து பின்னர் அறிதல்.
இதனால், மந்திரங்களைக் கணிக்கும் முறைகளுள் எளிதான ஒன்று இயைபு பற்றிக் கூறப்பட்டது.
இதற்குப் பிறர் இவ்வாறன்றி, வயிரவி மந்திரங்களால் கர நியாசம் செய்யுமாறு கூறியதாகக்கொண்டு, அம்மந்திரங்களை இங்குத் தந்துரைப்பாரும், பஞ்சாக்கரத்தால் இருவைகப்படக் கரநியாசம் செய்யுமாறு கூறியதாகக் கொண்டு, அம்மந்திரத்தைத் தந்துரைப் பாரும் ஆவர். அவரெல்லாம், ``செந்தமிழாதி`` என்பதற்கு, `தமிழுக்கு முதல்வியாகிய வயிரவி` என இயைபின்றியும், `செந்தமிழாவது ஆகமம்` எனவும் `செந்தமிழ் மந்திரமாவது திருவைந்தெழுத்தே` எனவும் தத்தமக்கு வேண்டியவாறே உரைத்துக் கொள்வர். அவ் வுரைகளது தன்மை ஓர்ந்துணர்க.