ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பதிகங்கள்

Photo

வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.

English Meaning:
Sula Mudra

Difficult to practise are these Mudras;
Press the little finger in direction reverse,
Hold the ring finger and fore-finger pressed together
And insert the thumb finger in between.
Tamil Meaning:
கைகளை உள்முகமாகக் கொண்டு முயற்சியோடு சிறுவிரல் இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக மாறி வைத்து அணிவிரல்களையும் அவ்வாறே சுட்டு விரல்களால் மாறிப்பிடித்து மோதிர விரல்களின் மேல் நீண்டதாகிய நடுவிரல் ஒவ்வொன்றையும் நிமிர்த்திப் பொருந்த வைத்துப் பெருவிரல் இரண்டையும் மாற்றமின்றி உள்ளே புகச் செய்தபின், நேத்திர மந்திரத்தைச் சொல்லுக.
Special Remark:
இவ்வாறு அமைப்பது யோனிமுத்திரையாம். இது பஞ்சமுக முத்திரையினின்றும் சிறிதே வேறுபடுதல் அறிக. மாறி வைக்கப்பட்ட சிறு விரல்களைப் பின் நடு விரல்களின் மேல் சார்த்த வேண்டுதல் காண்க. மேற்கூறிய இரண்டில், `திரிசூல முத்திரை நன்கு அறியப்பட்டது` என்னும் கருத்தால். ஏனை ஒன்றன் அமைப்பையே கூறினார். சிலர் வலக்கையில் உள்ள சிறுவிரலைப் பெருவிரலால் வளைத்துப்பிடித்து அவற்றின் நடுவில் உள்ள மூன்று விரல்களை நிமிர்த்திக் காட்டும். ஆக்ரகண்ட முத்திரையையே `நேத்ர முத்திரை` என்றும், `திரிசூல முத்திரை` என்றும் கொள்வர். எனினும், இரு கை விரல்களையும் நன்கு கோத்துப் பிடித்துச் சிறுவிரல்கள், நடுவிரல்கள், பெருவிரல்கள் என்பவற்றை நிமிர்த்தித் தம்முள் பொருந்த வைத்துக் காட்டுவதே திரிசூல முத்திரை என்க.
`வருத்தத்தோடு சிறுவிரல் இரண்டும் மாறிப் பொருந்தி` எனவும், `நெடிதாகிய நடுவை நெரித்து ஒன்ற வைத்து` எனவும் கூட்டுக. `புக்கபின்` என்பது, `புக்கு` எனத் திரிந்தது.
இதனால், அரிதில் அறியப்படுவதொரு முத்திரையை அமைக்குமாறு கூறப்பட்டது.