ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகிய இயற்றவல் லானும்
ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.

English Meaning:
Go and Seek Siva in the Proper Way

Lament not
That you know Him not;
Go the proper way
And you shall meet Him;
He who as Lights twine (Sakti and Siva)
Creates all,
As one Light in my heart is united.
Tamil Meaning:
மாணவகனே, குருவருள் பெறாத மற்றவர் -களைப்போல நீயும் இராக் கதிரிபோலச் சிறிதறிவைத் தருபவனாயும், பகற் கதிர்போலப் பேரறிவைத் தருபவனாயும் இருந்து எல்லா வற்றையும் செய்கின்ற சிவனைப் புறத்தெல்லாம் தேடி, `ஐயோ!` சிவனைக் காணமுடியவில்லையே` என்று கதறி அழாதே. ஏன் எனில், அவனை அகத்தே அறிதலாகிய அந்த நெறியைப் பற்றி, அதிலே சென்ற பொழுது அவன் எனக்குக் கிடைத்தான். அதன்பின் அவன் முன்போல இருசுடராய் இல்லாமல் பகற் கதிராகிய ஒரு சுடரேபோலத் தோன்றி, அந்நிலையினின்றும் மாற்றம் சிறிதும் இன்றி, என் உள்ளத்துள் நீங்காதிருக்கின்றான்.
Special Remark:
`நீயும் அந்நெறியிலே சென்றால் தவறாமல் அவனை அடைவாய்` என்பது குறிப்பெச்சம். `அகத்தே அறியும் நெறியே நின்மலாவத்தை` என்பது மேலே குறிக்கப்பட்டது. ``வழியே`` என்றது, `பிறழாது பற்றி` என்றபடி. ``நேர்பட்ட பின்னை`` என்ற அனுவாதத்தால், நேர்பட்டமை தானே பெறப்பட்டது. உம்மை சிறப்பு. சிறிதறிவைத் தருதல் திரோதான சத்தியால், பேரறிவைத் தருதல் அருட்சத்தியால். இவையே பெத்த முத்தி நிலைகளாம். ரகாரவகையால் எதுகை ஒன்றிற்று.
இதனால், நின்மலாவத்தையை எய்தாது வருந்தும் மாணாக்கன் மேல் இரக்கங்கொண்டு, அதனை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.