ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.

English Meaning:
By Grace Jiva Becomes Knower

Devoid of knowledge
Are Tattvas thrity and six;
The Self that knows
I know not;
``You shall know``
Thus blessed Nandi;
Then I knew
That I am the Knower.
Tamil Meaning:
தத்துவங்கள் முப்பத்தாறினையும், அவை தாமே அறிந்தும், செய்தும் வருவனவாக மயங்கி, உண்மையில், `அவற்றைக் கருவிகளாகக்கொண்டு அறிபவனும்` செய்பவனும் நான்தான்` என்பதையான் பெத்த காலத்தில் அறிந்து கொள்ளாமலே மயங்கி யிருந்தேன். பின்பு நந்திபெருமான், மேற்குறித்த உண்மையை எனக்கு அறிவுறுத்தருளினார். அந்த உண்மையை அங்ஙனமே அறிந்து கொண்டமையால், முத்தனாயினேன்.
Special Remark:
`பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `இவ்விரண்டிற்கும் காரணம் பக்குவம் எய்தாமையும், எய்தினமையும்` என்பது மேலே கூறப்பட்டது.
இதனால், `மெய்யுணர்வு திரோதானசத்தி அருட்சத்தியாய் மாறின அளவில் பெறப்படாது. குருவினாலே பெறப்படும்` என்பது கூறப்பட்டது.