ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

English Meaning:
The Evolved Souls Who Reached Siva`s Grace

Those who reached Siva
Are the Charanars, Siddhas, and Samadhi Yogis
The Jnanis who in God-Truth stood,
The Anandas who in love adored,
And Nathas—all, blessed of Grace Divine.
Tamil Meaning:
முன் மந்திரத்தில், ``சிவனுடன் சாரலும் ஆமே`` எனக்கூறிய சார்ச்சி, `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என நால்வகைப் படுதலால், அவ்வம்முறையால் சிவனைச் சார்ந்தவர் முறையே. `சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர்` என நிற்பர். எனினும் இறுதியில் சொல்லப்பட்ட சமாதியரே சிவானந்தத்தை அடைந்தவர். அவரே நிலையான அருள் தன்மையைப் பெற்றவரும் ஆவர்.
Special Remark:
சாரணர் முதலிய மூவரும் சிவலோகத்தில் இருக்கும் நிலைபற்றி அப்பெயர்களால் கூறப்பட்டன. சாரணர் - எங்கும் சென்று உலாவி வருபவர். `ஒருவர் இல்லத்தில் பணி புரியும் பணியாளர் அவ் இல்லத்தில் எங்கும் செல்லும் உரிமையுடையர் ஆதல்போலச் சிவ லோகத்தில் எங்கும் செல்வபர்` என்றபடி. இதுவே `சாலோக பதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் சரியைத் தொண்டு, `தாச மார்க்கம்` அல்லது, `தொண்டர் நெறி` எனப் பட்டது. சித்தர் - சிறப்புப் பயன் கிடைக்கப் பெற்றவர். `சிவ லோகத்தில் சிவனுக்கு அணுக்கராய் இருக்கும் சிறப்புரிமை பெற்றவர்` என்றவாறு. இதுவே `சாமீபபதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகைத்தாதல் பற்றியே இதனைத் தரும் கிரியைத் தொண்டு, `சற்புத் திரமாரக்கம்` அல்லது `மகன்மை நெறி` எனப்பட்டது. சமாதியர் - சிவனுக்குச் சமமானவர். `சிவலோகத்தில் சிவனது உருவத்தைப் போன்ற உருவத்தையே பெற்றிருப்பவர்` என்றபடி. இதுவே `சாரூப பதவி` எனப் படுகின்றது. இப்பதிவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் யோகப் பயிற்சி, `சகமார்க்கம்` அல்லது `தோழமை நெறி` எனப்பட்டது. இவை மூன்றுமே பத முத்திகளாம். சாத்தியர் - சாத்தியத்தை, அஃதாவது தமது கிறிக்கோளை அடைந்துவிட்டவர். இவரை ``மெய்ஞ்ஞான தத்துவர்`` என எடுத்துக்கூறியதனால், `முன் சொல்லப்பட்ட மூவரும் மெய்ஞ்ஞானத்திற்குரிய படிகளில் நின்றவர்` என்பது பெறப்பட்டது. குறிக்கோள், சிவனோடு இரண்டறக் கலந்து, மீண்டுவாரா நிலைமையில் இருத்தல். அந்நிலையே ஆனந்த நிலையுமாம் ஆதலின், ஆனந்தத்தைப் பெறுதலும் குறிக்கோளாயிற்று. ``சத்த அருள்`` என்பது, `வெண்மைய ஆடை` என்பதுபோல வினைக் குறிப்பு பெயரெச்சத்தொடர் `தத்துவம்` என்பதபல பொருட்கட்கு உரியதாகச் சொல்லப்படுதலால், இங்குச் சொல்லப்படும் தத்துவம், `மெய்ஞ் ஞான தத்துவம்` என்றார். `மெய்ஞ் ஞானமாகிய தத்துவம்` என்றபடி. `முன் மந்திரத்திற் சொல்லிய சார்ச்சி வகையை உடையவர் நால்வகையினர்` என்றற்குச் ``சார்ந்தவர்`` என்பதை எழுவாயாக வைத்துக் கூறினார். சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இங்குக் கூறிய சமாதி, `அநாதிக்குச் சமமாக எண்ணப்படும் ஆதி` என்க.
இதனால், `சிவனைச் சாருமுறையும், அம்முறைகளால் அடையும் பயன்களும் நால்வகையினவாம்` என்பது உணர்த்தும் முகத்தால் `இறுதியிற் கூறிய பயன்நின்மலாவத்தையாலே உளதாம்` என்பது கூறப்பட்டது.