ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

English Meaning:
Mount the Steed if Sivajnana and Reach God

The love of Holy Feet
That is beyond reach,
By Grace he reaches;
Then by way appropriate journeying,
He rouses the mighty steed of Sivajnana
And mounting it passes beyond,
And so reaching Siva Himself.
Tamil Meaning:
அடைதற்கரிய சிவபத்தியைப் பொதுவாகத்தான் அறிந்த முறையில் அடைந்து ஒழுகிய ஒருவன் பின்பு கிரியா குருவின் அருளால் சிறப்பாக அதனை அடைந்து, அவர் அறிவுறுத்த முறை யிலே சிவதன்மத்தில் ஒழுகிச் சிவயோகத்திலும் பயின்று, அதன் பயனாகப் பின்பு சிவஞானமாகிய யானையின்மீது ஏறிச் செலுத்தி, மும்மாயை களையும் தாண்டிச் சென்று, அப்பால் உள்ள சிவனோடு கூடுதலும் கூடும்.
Special Remark:
``மீண்டு உற்று`` என்றதனால், முன்பு ஒரு முறை உற்றிருந்தமை பெறப்பட்டது. நூல்வழியாகவும், காட்சி வழியாகவும் அவரவர் தாம் தாம அறிந்தவாற்றால் சிவ பத்திகொண்டு சிவதன்மங் களில் ஒழுகுதலால் வரும் சிவபுண்ணியம், பொதுச் சிவபுண்ணியமும், குரு அருளால் அறிந்து அவற்றில் முறைப்படி ஒழுகுதலால் வரும் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியமும் ஆகும். பொதுச் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியத்தைத் தர உண்மைச் சிவ புண்ணியமே உண்மைச் சிவ ஞானத்தைத் தரும். உண்மைச் சிவ ஞானமே சிவமாம் தன்மையைப் பயக்கும். இம்முறையையே இம்மந்திரம் கூறுமாறு அறிக.
சரியை, கிரியை இரண்டும் `சிவ தன்மம்` என ஒன்றாகவும் சொல்லப்படும் என்பதை,
``நல்லசிவ தன்மத்தால், நல்லசிவ யோகத்தால்,
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்``*
என்னும் திருக்களிற்றுப்படியாரால் விளங்கும்.
`நேயத்தை அருளால் மீண்டு உற்றுச் சென்று ஏறித்தூண்டித் தாண்டிச் சாரலும் ஆம்` என வினைமுடிக்க. `மா` என்பது காட்டு விலங்குகள் அனைத்திற்கும் பொதுவான பெயர். `பாய்மா, பரிமா` என்பன குதிரையைக் குறிக்கும் சிறப்புப்பெயர். `அரிமா` என்பன சிங்கத்தைக் குறிக்கும் சிறப்புப் பெயர். `கைம்மா` என்பது யானையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். எனவே, இங்கு, `மா` என்னும் பொதுப்பெயர், இடம் நோக்கிக் கைம்மாவைக் குறித்தது. அது, ஞானம், எவ்விடத்திலும் யானையாக உருவகப்படுத்துதலே மரபாதலால் விளங்கும். உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால், `தவம், ஞானம்` என்னும் இரண்டுமே குரு வருளால் எய்தற்பானவாய், ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை யாதல் கூறப்பட்டது.