ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

English Meaning:
From Turiya State No Return to Tattvas

All within him (Jiva)

And he in all without;
Thus if Jiva
The Turiya State experience,
No more shall it return
To Tattvas six times six;
Divine Knowledge (Bodha)
It will attain;
And so reach Siva-State.
Tamil Meaning:
சட உலகங்கள் யாவும் தனக்குள் அடங்கியிருக்க, சிவஞானத்தால் எல்லாப் பொருளையும் ஒருங்கேயறியும் தன்மை யுடையவன் ஆகின்ற அத்தகைய நல்ல துரியத்திலே தங்கும் நிலையை ஓருயிர் அடைந்துவிட்டால் அது நல்ல உயிராகும், பின்பு அது பிறவி யாகிய தீமையை விளைவிக்கின்ற முப்பத்தாறு தத்துவங்களில் செல்லாது. முன்பெல்லாம் சடங்களாகிய அவற்றிற்சென்று அவையே யாய் இருந்ததுபோல் இல்லாமல் அவற்றின் நீங்கி அறிவுப் பொருளாய், செல்லாது செல்வதாகிய சிவகதியை அடையும்.
Special Remark:
பெத்த காலத்தில் ஆன்மாப் பாசங்களின் வியாப்பி யமாய் இருந்து, முத்திகாலத்தில் அவைகளைக் கீழ்ப்படுத்தி நிற்றல் பற்றி, ``எல்லாம் தன்னுட் புக`` என்றும், பெத்த காலத்தில் ஆன்மாத் தத்துவங் -களைப் பற்றி ஏகதேசமாய் இருந்து, முத்தி காலத்தில் சிவ ஞானத்தைப் பற்றி வியாபகமாய் நிற்றல் பற்றி, ``யாவுளும் தானாய்`` என்றும் கூறினார். `நன்று` என்பது இறுதிநிலை கெட்டு, ``நல்`` என முதனிலை யளவாய் நின்றது. ``நல்லாந் துரியம், நல்லுயிர்`` என்பவை, `சுத்த துரியம், சுத்தான்மா` என்பதாம். ``புரிந்தக்கால்`` என்பது, புரிதலின் அருமை தோற்றி நின்றது. ``ஆகிப்புரிந்தக்கால்`` என்றாரேனும், `புரிந்து ஆகியக்கால்` என்பது கருத்தென்க. செல்லாது செல்லுதலாவது, `முன்பு வேறாய் இருந்து, பின்பு சென்று அடைதல்` என்பதின்றி, முன்பே உள்ளதனை உணர்தல் ``அன்றே`` என்றது தேற்றம்.
இதனால், நின்மலாவத்தையின் இயல்பும், பயனும் கூறப் பட்டன.