ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.

English Meaning:
Lord Who is Beyond-Beyond is Yet Life of Life

Immanent is He
In Real, the Unreal and all;
He is Lord
That is the Real, Unreal and Real-Unreal;
Beyond, beyond speech is He;
Hasten and realize,
He will be the Life of your life.
Tamil Meaning:
உணருமாற்றால் உணராதவர்களால், `இல்லை` என மறுத்துக் கூறப்படும் பொருளாய் உள்ளவனும், உணருமாற்றால் உணர்ந்தவர்களால், `உண்டு` என நிறுவப்படும் பொருளாய் உள்ளவனும், உலகின்கண், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகைப் பட்ட எல்லாப் பொருள்களிலும் ``அவையே தானாய்``க்* கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையைத் தான் எய்தாமையால் அவற்றின் வேறாய் உள்ளவனும் ஆகிய முதல்வனாம் சிவனை வாக்குக் குறிப்பிட முயலுமாயின் அதற்கு எட்டாத நெடுந்தொலைவில் உளன். இவ்வுண்மையை உயிர் எவ்வளவு விரைவாக அவ்வளவு விரைவில் அதன் உள்ளுயிராய் விளங்கி நிற்பான்.
Special Remark:
``இல்லதும் உள்ளதுமாய்`` - என்பதை முதலிற் கொள்க. முதல் அடியில் சொல்லப்பட்ட இன்மை உண்மைகள் புலனாகாமை புலனாதல்களைக் குறித்து நின்றன. ``உண்மையுமாய், இன்மையுமாய்``8 என்று அருளிச்செய்ததும் இவ்விரு பொருளும் பற்றி என்க. `இல்லதும் உள்ளதும் ஆகிய யாவையும்` - என்க. ``ஆகியும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது சொல்லால் சொல்லுதலை, `சொல் சொல்லிடில்` எனக்கருவியே வினை முதல் போலக் கூறப்பட்டது. சொல், வாக்கு, அது நால்வகைத்தாதலை அறிக. வாக்குக்கள் சுத்த மாயாகாரியம் ஆதலின் அதற்கும் அப்பாற்பட்ட நிலையை `தூர அதிதூரம்`` என்றார். ``பாதாளம் ஏழினும் கீழ் சொள் கழிவு பாதமலர்``l ``சோதி மணிமுடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை``3 ``சொற்பதச் சொற்பதமும் கடந்துநின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை`` * என்னும் திருமொழிகளை உணர்க. அது, பகுதிப்பொருள் விகுதி. `உணர்தல், அவன் அருளால்` என்பது அறிக.
இதனால், முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் துரியா தீதனாயினும் எங்கும் நிறைந்து நிற்பவன் ஆதலின், அவனை உணரு மாற்றால் உணரின் உணரப்பட்டு நிற்பான் என்பது கூறப்பட்டது.