ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.

English Meaning:
Jiva Son of Siva

Jiva is the son,
All the hoary scriptures thus say;
That they know not
The Jiva indeed is the Son of Hara;
For, without Jiva,
None the Tattvas five times five be.
Tamil Meaning:
`உயிர்கள் அனைத்திற்கும் சிவன் தந்தை` என்பதும், `சித்தி தாய்` என்பதும் வேதாகமங்களில் எங்கும் முழங்கும் முழக்க மாதலை அறியாது சிலர் ஆன்மாவை, `தாயும் இலி; தந்தையிலி` என்கின்றார்கள். அஃது உண்மையாயின், சடப்பொருள்களாகிய தத்துவங்களும், அவற்றைக்கொண்டு ஆன்மாக்கள் உலகில் பிறந்து வினைகளை நுகர்ந்தும் ஈட்டியும், பின்பு இறந்தும் செல்லும்நிலை இல்லையாகவேண்டும்.
Special Remark:
உயிர்களுக்குச் சிவனும், சத்தியும் தந்தையும், தாயும் ஆதலை, ``ஆலவாயில் அப்பனே`` எனவும் ``பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை``l எனவும், மற்றும் பல இடங்களிலும் இவ்வாறு வருவனவற்றால் அறிக. சிவனுக்கும், சத்திக்கும் வேறு பாடின்மை பற்றிச் சிவனையே. ``தொடர்ந்து நின்றேன் - தாயானை``3 ``அம்மையே, அப்பா``8 என்றாற்போலவும் பல இடங்களில் அருளிச் செய்வர். எவ்வாறாயினும், `பரம்பொருட்கு ஆன்மா மகன்` என்பதில் ஐயமில்லை. ``அறிகிலர்`` என்பது, அறியாமையால் அதனை மறுத்துக் கூறுதலாகிய காரியத்தை உணர்த்திற்று. ஆன்மா அறிவுடை உலகமாயும், தத்துவ தாத்துவிகங்கள் அறிவிலா உலகமும் ஆதலின், `ஆன்மாத் தோற்றம் உடையது ஆகாவிடின் உலகமே இல்லை` என்பார். ``ஆன்மாவும் இல்லையால்; ஐயைந்தும் இல்லையே`` என்றார். வித்தியாதத்துவங்களைப் புருடதத்துவத்தில் அடக்கி ``ஐயைந்து`` என்றார்.
இதனால், `ஆன்மா யோக ஞானங்களால் உலகினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.