ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

English Meaning:
Self-Knowledge is True Knowledge

The effect of goodly tapas
In past performed,
Can with knowledge
In present be discerned;
Self-Knowledge is knowledge true,
The rest is but knowledge demented.
Tamil Meaning:
முதலில் நிகழும் அறிவு பெரிய தவ அறிவாயும், பின்னர் நிகழும் அறிவு அந்தத்தவத்தால் வரும் மெய்யறிவாயும் நிகழ்தல் வேண்டும். பின்னை அறிவு மெய்யறிவாய் நிகழ்ந்தவழியே முன்னை அறிவு தவ அறிவாய் நிகழ்ந்தமை அறியப்படும், இல்லையேல், அது வெற்றறிவாக அறியப்படும். முதல் அறிவால் நிகழ்ந்த தவத்தால் பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளேயாம்.
Special Remark:
முதுதவம் - பெருந்தவம். ``அறிவினில்`` என்ற `இன்` ஏதுப் பொருளில்வந்த ஐந்தாம் உருபு. பின்னைப் பெற்றால்` என இயையும். ``அறிவினைப் பெற்றால்`` என்பதில் `அறிவு` எனப் பட்டது. பின் இரண்டடிகளால் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் `இன்னது` என விளக்கப்பட்டது.
ஆன்மாத் தன்னை உள்ளவாறு அறிதலாவது, உலக வாழ்க்கையானே தனக்குச் சுதந்திரம் இன்மையை உணரும் முகத்தால், தனக்கு ஒரு தலைவன் உளன் ஆதலை அனுமானத்தால் உணர்தலும், பின்னர்த் தனது தவத்திற்கு ஏற்ப நிகழும் நிகழ்ச்சிகளால் அனுபவமாக உணர்தலுமாம். அனுமானத்தால் உணருமாற்றை ஔவையார்,
``ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்;
அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;
எனை ஆளும் ஈசன் செயல்`` 3
என விளக்கினார். `பின்னை` என்பது `மற்று` என்னும் பொருளைத் தந்தது. பேயினது அறிவு நெறிப்படா அறிவு அஃது உவம ஆகு பெயராய் அதுபோன்ற அறிவைக் குறித்தது.
`பல பிறப்புக்களில் செய்த தவமுதிர்ச்சியால் பின்னர்ச் சில பிறப்புக்களில் ஞானம் நிகழும்` என்பதும், `அந்த ஞானமாவது இது` என்பதும் உணர்த்தும் முகத்தால், `ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை` என்பது இதனாற் கூறப்பட்டது. ``இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத் தான் ஞானம் நிகழும்``8 எனவும், ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார் எம்மையுடைமை`` எனவும் மெய்கண்ட தேவரும் கூறினார்.