ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

English Meaning:
In Samadhi Jiva Unites in Siva

They who attain Samadhi
They and He one become;
Sundered will be Malas,
Vanished the Jiva-State;
Their body (as Divine Light)
Will in Siva`s World be;
They in Siva unite
Devoid of blemishes eight.
Tamil Meaning:
[கீழாலவத்தை மத்தியாலவத்தைகளை நோக்க, மேலாலவத்தையாகிய யோகாவத்தை நிறைவுடையதேயாம். எனினும், ஞானாவத்தையை நோக்கின் அது குறைவுடையதேயாகும். ஆகையால்] இயமம், நியமம் முதலாக உள்ள அந்த எட்டுறுப்புக் களையும் (சமாதி உட்படக்) கடந்து, நின்மல துரிய நிலையில் ``அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி நிற்றலாகிய``8 அந்தச் சமாதி கைவந்தால்தான் அநாதி தொட்டே பற்றியுள்ள ஆணவமலம் வாசனையும் இன்றி நீங்கும். (அப்பொழுது பின் வந்த மாயை கன்மங் களாகிய பாசங்களும் அவ்வாறாம். ஆகவே, அப்பொழுதுதான்) ஆன்ம, `பசு` என்கின்ற நிலைமை நீங்கப்பெற்று, `சிவம்` எனப்படும் நிலையை எய்தும்.
Special Remark:
ஒளி வந்தவழியல்லது இருள்போகாதது போல, ஞானம் வந்த வழியல்லது அஞ்ஞானத்தைச் செய்வதாகிய ஆணவ மலம் அறுமாறில்லை. ``அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான் - ஆனத்தால் அதுபோவது; அலர்கதிர்முன் இருள் போல்``3 என்பது சிவஞானசித்தி. இதனால் இங்கு ``சமாதி`` என்றது ஞான சமாதியேயன்றி, யோக சமாதியன்று. ``தான் அவனாகும் சமாதி`` என எடுத்தோதியதும் அது விளங்குதற் பொருட்டு. இந்த ஞான சமாதியையே திருக்களிற்றுப்படியார்,
``சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியும்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று``8
எனக்கூறிற்று. இங்குக்கூறிய சமாதியை `யோக சமாதியே` எனக் கொள்கின்றவர்கள் `எட்டு` என்னும் எண்ணிக்கைக்குத் தங்கள் தங்கட்குத் தோன்றிய பொருளைக் கூறுவர்.
ஈற்றடியை முதலிற் கூட்டி, `ஈன்மில் காயம் இருநிலத் திருக்கும்` என முடிக்க. காயம் இருத்தலைக் கூறியது, `ஞான சமாதியை அடைந்தோர் காயத்தை இருந்த வேண்டினும் இருக்கும்` என்பது உணர்த்துதற்கு, ஞானிகளது உயிரேயன்றி, உடம்பும் நின்மலமேயாதலைக் குறித்தற்கு, ``ஈனம் இல் காயம்`` என்றார்.
இதனால், `யோக துரியாதீதத்தைக் கடந்து நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.