ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.

English Meaning:
Rid of Malas

They who with Siva unite
Are of Malas Five rid;
They who do not unite thus
Are of dark Malas Five possessed;
Destined are they to be born
On Earth, Heaven and Hell;
None know,
All these from His Grace results.
Tamil Meaning:
`மலம்` எனப்படும் ஐந்தும் நீங்கப் பெற்றவர்களே சிவமாந்தன்மையைப் பெற்றார்கள். அவற்றுள் ஒன்று ஒன்று நீங்கப் பெற்றவர்களும், ஒருமலமேனும் நீங்கப் பெறாதவர்களும் நிலத்திற் பிறந்து, பின் சுவர்க்கத்திலும், நரகத்திலும், புகும் பகுதியினரேயாவர். ஆயினும், `இவ்விருவகை நிலைகளும் சிவனது கருணை காரணமாக அவனது சத்தியாலே நிகழ்வன` என்பதை அறிபவர் உலகத்தில் அரியர்.
Special Remark:
ஒன்றிரண்டு மலங்கள் நீங்கப்பெறுதலாவது ஆணவம் தவிர ஏனைய மாயை கன்மங்கள் நீங்கப் பெறுதலாம். `அவர்கள் இயற்கையாயுள்ள பிரளயாகலர், விஞ்ஞானகலரா தன்மையர் ஆதலல்லது, சிவமாம் தன்மையைப் பெறாமையால், ஆணவ வலியால் மீண்டும் சகலர் நிலையை அடைதல் கூடும்` என்பதாம். ஆயினும் `இவ்இருவகையும் பக்குவ அபக்குவங்களை நோக்கிச் சிவனது அருட் சத்தியும், திரோதான சத்தியும் செய்யும் செயலேயாம்` என்பதும் `திரோதான சத்தியின் செயலும் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல்போலக் கருணை காரணமாக நிகழ்வதே` என்பதும் அறியத் தக்கன என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் சிவத்தினது ஞானத்தாலே என்பது தோன்ற அடைபுணர்க்கப்பட்டது. ஆகவே, `ஐம்மலம் தீர்ந்தவர் அந்த ஞானத்தைப் பெற்றுச் சிவம் ஆவர்` என்பதும், `ஐம்மலத் தீராதவர் அந்த ஞானத்தைப் பெறார் ஆகலின் சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆக மாட்டாது பிறப்பை எய்துவர்` என்பதும் போந்தவாறு அறிக. `பாரின்கண் பிறந்து` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `மலாவத்தை நீங்கப் பெறாதவர்க்குப் பிறப்பு அறாது` என்பதும், `மலாவத்தை நீங்கி நின்மலாவத்தையை எய்தினோரே பிறப்பற்றவர் ஆவர்` என்பதும் ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டன.