ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.

English Meaning:
Play of Hara`s Grace
Like the artificial elephant
On stilt played,
Is the play of Hara`s Grace;
With the aid of elements (Tattvas), it sways Jiva,
And makes it dance this way and that,
And consigning it to life and worldly ways,
Infuses the Light of Jnana
And finally plants it (Jiva) in Life of Grace;
All, all, the work of Grace.
Tamil Meaning:
மனிதன் ஒருவன், யானைபோலப் பொய்யாகச் செய்யப்பட்ட பொறியினுட் புகுந்து மறைந்து கொண்டு, அதனை உயிருடையது போலப் பலவகையில் இயங்கச் செய்யும் செயல்போல, அருள் மாயையின் காரியமாய்ப் பரந்து விரிந்த உலகினுள் மறைந்து நின்று அதனைப் பலவகையாக இயங்கச்செய்து, அதனானே உயிரினது அறிவைப் படைத்தல் முதலிய தொழில்களால் பலவாறாக விளங்குவித்து, அவ் இயக்கத்துட்பட்டு அலமரச் செய்யும். `அருள்` எனப்படுவது சிவனது அருளே.
Special Remark:
கரி - யானை. அதனை ஆட்டுதல் வினைக்கு வினை முதல் ஆற்றலால் பெறப்பட்டது. `பொய்யானையின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே எண்ணிச்சிறுபிள்ளைகள் பலவகை உணர்ச்சிகளை அடைதல்போல, உலகத்தின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே கருதி, அறிவில்லாதவர் பலவகை உணர்ச்சிகளை எய்துகின்றனர்` என்பது உவமையால் போந்த பொருள். அத்தகைய உணர்ச்சிகளைத் தோற்றுவித்தலையே, ``போதம், புரிந்து`` என்றார். ``அருள்`` என்பதை முதலிற்கூட்டுக. ``பூதம்`` என்பது உபலக் கணத்தால் `பூதம் முதலியவை` எனவும், `பூ` என்பது, மண் முதலியவை` எனவும் பொருள் தந்தன. `படைப்பாதியால்` என உருபு விரிக்க. ``இயல் கூட்டத்தால்`` என்றாரேனும், `கூடிய இயலால்` என்பது கருத்து. இயல் - இயலல்; இயங்குதல். முதனிலைத் தொழிற்பெயர். `அஃது அரன் அருளாமே` என, எழுவாய் வருவித்துரைக்க. இதனை எடுத்துக் கூறியது, `பிறகடவுளரது அருள்கள் அல்ல` என்பது உணர்த்தி, `அவர்களது செயல்களும் அரன் அருளே` என வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், `எல்லாம் திருவருட்செயலே` என்பது விளங்காமை அறியாமையால் என்பகு கூறப்பட்டது.