ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.

English Meaning:
Jiva Knowledge is Doubt-Tossed; Siva Knowledge is Light Divine

As the Sakti aids the Jiva
In Peddha as well as Mukti
Jiva that is doubt-tossed in the first,
Becomes doubt-free in the second;
And in that condition
Sakti grants its divine instrument
Of Jnana to Jiva;
That verily is the abiding Light
That transcends Jiva`s flickering light.
Tamil Meaning:
உயிர்கள் அவற்றைச் செலுத்துகின்ற சிவசத்தியின் தன்மைக்கு ஏற்ப மயக்க உணர்வைப் பெற்றுப் பெத்தத்தையும், மெய் உணர்வைப் பெற்று முத்தியையும் ஏனெனில், அந்த `மயக்கம், மெய்` என்னும் இரண்டையும் உயிர்கட்குத் தருகின்ற ஞானமாகிய தன் சத்திக்குச் சத்தனாய் உள்ள சிவன், ஒரு பெற்றியில் நில்லாது இருவேறாய் நிற்கின்ற அந்தச் சத்திக்கு உயிராய் நின்று அதனைச் செலுத்துவன் ஆதலின்.
Special Remark:
`உயிர், சத்தியால் மான்று பெத்தத்தையும், தெருண்டு முத்தியையும் பெறும்` என்க. இது முறை நிரல்நிறை. உயிர் பக்குவம் எய்தாத பொழுது மலங்கள் அதன் ஆற்றலை அடக்கித்தாமே மேற்பட்டு நிற்றலால் அப்பொழுது சிவனது அப்பாசங்களைச் செலுத்தி அவை வழியாக உயிருக்கு மயக்க உணர்வையும், உயிர் பக்குவம் எய்திய காலத்தில் அதன் ஆற்றலை மலங்கள் அடக்க மாட்டாது, அதற்குக் கீழ்ப்பட்டுப் போதலால், அப்பொழுது சிவனது சத்தி தான் நேர்நின்று உயிர்கட்கு மெய்யுணர்வையும் தரும். அதனால், ``மான்றும், தெருண்டும் பெறும்`` என்றார். மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து. ஒன்றாகிய சத்தியே, பாசத்தின் வழிநின்று அறிவை மயக்கும் பொழுது `திரோதான சத்தி` என்றும், மயக்காது விளக்கும் பொழுது `அருட்சத்தி` என்றும் பெயர் பெறும். `ஞானத்தன்` என்பது இன்னோசை நோக்கி மெலித்தல் பெற்றது. ஒன்றேயாயினும் இரண்டாய்ச் செயலாற்றுதல்பற்றிச் சத்தியை ``ஊன்றல் இல்லா ஒளி`` என்றார். மற்று, தான் அசைகள். ``ஒளிக்கு ஒளி`` என்றது, `சிவன் செயற்படுத்திய வழியிலே சத்தி செயற்படும்` என்பது உணர்த்துதற்கு முன்பு, ``சத்திக்குச் சத்தன்`` என்றதை இனிது விளக்கியவாறு.
இதனால், மேற்கூறிய பெத்தமும் முத்தியும் சிவனாலே ஆமாறு கூறப்பட்டது.