ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.

English Meaning:
Suddhas Reach Mauna State

Espousing,
The Sat, Asat, and Sat-Asat,
The Jiva becomes
The Chit, Achit, and Siva-Chit;
Those that reach that Turiya State
Where neither Suddha (Pure) or Asuddha (Impure)
Maya is
They verily are the Suddhas (Pure ones);
Transcending the States three,
(Sat, Asat and Sat-Asat)
They reach Silence, surpassing.
Tamil Meaning:
சகலத்தில் சுத்தமாகிய மேலாலவத்தையும், (யோகாவத்தையும்) சகலத்திற் சகலமாகிய மத்தியாலவத்தையும், சகலத்தில் கேவலமாகிய கீழாலவத்தையும் ஆகிய இவைகளின் தொடர்புகள் சிறிதும் இல்லாது நீங்கிய நின்மல துரியத்தில் நிற்றலால் சுத்தான்மாக்களாய், சொல் நிகழ்ச்சி அத்துரியத்திற்கு முற்பட்ட, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி` என்னும் மூன்றோடே நீங்கப் பெற்றவர்கட்கு, சத்தாய் உள்ள சிவமும், அசத்தாய் உள்ள பாசங்களும், சதசத்தாய் உள்ள ஆன்மாவும் முறையே சித்தும், அசித்தும், சிதசித்தும் ஆதல் முற்ற அனுபவமாய் விளங்கும்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. அசுத்தம் போலத் தொடர்பற்றதாகக் கூறினமையால், ``சுத்தம்`` என்றது சகலத்திற் சுத்தமேயாயிற்று. முப்பொருள்களின் இயல்பு சத்து, அசத்து, சதசத்து ஆதல் மட்டும் விளங்கல் நிரம்பாமையால், `அவை முறையே சித்தும், அசித்தும், சிதசித்துமாதல் விளங்கும்` என்றார். சிவஞான போதத்துள்ளும் `இருதிறன் அல்லது சத்தாம்` என்று ஒழியாது. ``சிவசித்தாம்`` என அருளியதையும் 8 அதன் உரையையும் நோக்குக.
`சத்து` என்பது, `உள்ளது` என்றும், `அசத்து` என்பது இல்லது` என்றும், `சதசத்து` என்பது, `சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்கும்` என்றும் பொருள் தரும். இன்றும் `உள்ளது` என்பது, `என்றும் ஒரு படித்தாய் உள்ளது` என்றே பொருள்தரும். அதனால் `அசத்து` என்பது `சிலகாலம் உள்ளதாய் இருந்து பின் இல்லதாகிவிடும்` என்றே பொருள் தரும். இம்முறையில் சத்தாய் உள்ளது சித்தாயும் இருக்கும்; அஃதாவது அறிவாய், ஒருஞான்றாமை அறியாமை உடையதாகாமல் இருக்கும். அசத்தாய் உள்ளது அசித்தாயும் இருக்கும். அஃதாவது எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் அறிவுடையதாகாது அறியாமையை உடையதாயே இருக்கும் `சடம்` என்பது இதுவே சதசத்தாய் உள்ளது சிதசித்தாயும் இருக்கும். அஃதாவது சித்தோடு கூடிச் சத்தாயும் அஃதாவது அறிவுடையதாயும் அசித்தோடு கூடி அசத்தாயும் அஃதாவது அறியாமையுடையதாயும் இருக்கும். `இவையெல்லாம் நூலறிவால் அறியப்பெறினும், அனுபவமாக விளங்குவது நின்மல துரியத்தில்` என்பது இம்மந்தரத்தில் கூறப்பட்டது ``கூடிநிற்கும்`` என்றது அனைத்தும் விளங்கும்` என்றபடி ஏகாரம் பிரிநிலை.
இதனால், `நின்மலாவத்தையில்தான் அனுபவ ஞானம் உண்டாகும்` என்பது கூறப்பட்டது.