ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

English Meaning:
Pedda or Jiva Mukti

At the eternal Feet of Hara,
The Sakti appears;
And as it appears;
The interminable darkness
Of Jiva disappears,
And Light dawns;
And Jiva perseveres incessant
In the way of time-honoured Jnana
And thus reaches the State of Pedda (Jiva) Mukti.
Tamil Meaning:
(இருவினையொப்பு மலபரி பாகம்வந்த பொழுது ஆன்ம அறிவில் பதிகின்ற அருட்சத்தியை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என அதன் தன்மை பற்றி வழங்கப்படுமாயினும் அவை `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் சக்தி களின் வகையாகவே சொல்லப்படுகின்றது.l அந்த ஐந்து சக்திகளும் சிவனது திருவடியேயாம். (அருளை `அடி` எனக் கூறுதல் மரபு. அதனால், சத்தி நிபாதத்தில் உண்டாகின்ற ஞானமும் `திருவடி ஞானம்` என்றே கூறப்படும்). அந்த ஞான ஒளி தோன்றியவுடன், அநாதி தொட்டு விடாது பற்றி நிற்கின்ற ஆணவ இருள் நீங்கும். அது நீங்கவே, ஆன்மாவிற்கு இயல்பாய் உள்ள இச்சாஞானக்கிரியா சத்திகள் (ஆணவத்தால் தடுக்கப்பட்டிருந்தனவேயன்றி, அழிக்கப் படாமையால்) விளக்கம் பெற்று ஆன்மாத் தனது இயற்கை நிலையை அடையும். அடைந்த பொழுது முதற்கண் முற்றும் நீங்காத பெத்தமும் அது முற்றும் நீங்கிய முத்தியும் என்னும் இரண்டற்கும் இடைநிலையில் ஆன்மா இருக்கும்.
Special Remark:
அந்த நிலையே நின்மலாவத்தை என அறிக. `தோன்றும் ஐஞ்சத்தி தொலையா அரனடி` எனவும், `ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா` எனவும் கூட்டுக.
`ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா`` எனப்பொதுப் பட ஓதினாராயினும் சொல்லுவாரது குறிப்புத்திருவடி ஞானத்தின் மேலதும், ஆணவ இருளின் மேலதும் ஆதலை அறிக. மூன்றாம் அடியில் நின்ற ``தொலையா`` என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெய -ரெச்சம். மூன்றாம் அடியில் உள்ள ``தொலையா`` என்பது `செய்யா` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அதனை, `தொலைய` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக்கொள்க. இங்ஙனமாகவே இம்மந்திரம் சொற்பின்வருநிலையணிபெற்றதாம்.
இதனால், ஞானாவத்தையே நின்மலாவத்தையாதலன்றி, யோகாவத்தை அன்னதாகாமை தெரித்துணர்த்தப்பட்டது.