ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை

பதிகங்கள்

Photo

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே.

English Meaning:
All Forms of Knowledge Proceed From Grace

Bheda (Difference), Abheda (Non-difference)
And Bheda-Abheda (Difference Non-difference),
Knowledge native,
Knowledge that comes of learning,
And God-Knowledge;
Nada, (Sound)
And the Nada-Beyond-Nada, (the Nadanta that is Beyond-Beyond Sound)
All these come by Grace of the Holy One.
Tamil Meaning:
`சிவனது அருள்` எனப்படும் சத்தி, உலகுயிர் களோடு பொருள் தன்மையால் வேறாய் நின்று அவற்றை அறிவித்தும், இயக்கியும் நிற்றல், அவ்வாறு நிற்பினும் தான் அவற்றின் வேறாய்த் தோன்றாது ஒன்றேயாய் நிற்றல் என்னும் இவ்வகைகளால் ஒரு வகையில் பேதமாயும், பிறிதொரு வகையில் அபேதமாயும் இருத்தலும், மலங்களை நீக்குதலால் உயிர்களின் அறிவை விளக்கு தலால் அறிவாயும், மலங்களைச் செலுத்துதலால் அவற்றின் அறிவை மறைத்து அறியாமையாயும் இவ்வகைகளால் ஒருவகையில் அறிவாயும், பிறிதொரு வகையில் அறியாமையாயும், நாதத்தை எழுப்புதலால் நாத மாயும், அதனை ஒடுக்குதலால் நாதம் இல்லதாயும் இவ் வகை களால் ஒரு வகையில் நாதமாயும், பிறிதொரு வகையில் நாதம் இல்ல தாயும் இவ்வாறெல்லாம் பேதப்பட்டு நிற்றல் அதன் இச்சையாலேயாம்.
Special Remark:
இம்மந்திரத்துள் இரண்டாம் அடியில் பாடம் பெரிதும் திரிபு பட்டுள்ளது. மற்றும் திரிபுகள் உள. ``பேதா பேதம், போதா போதம், நாதாநாதம்`` என்பன அன்மொழித் தொகையாய், `இரண்டும் அல்லாத வேறொன்று` எனப்பொருளஅ தாராமல், உம்மைத் தொகையாய் இரண்டையும் குறித்துநின்றன. நாதம் - மொழி. ``அருள்`` இரண்டில் பின்னதை முதலிற்கூட்டி, ``அருளின்`` என்பதற்கு, `அதன்` எனப் பொருள் உரைக்க. அருளையுடைய சிவனது இச்சையை ஒற்றுமை பற்றி அருளது இச்சையேயாகவும், இச்சைப்படி நிகழ்வனவற்றை இச்சையாகவும் உபசரித்துக் கூறினார்.
இதனால், `சத்தியினது பேதங்கள் அது தானாகவே ஆக்கிக் கொள்வன அன்றிப் பிறிதொன்றால் ஆக்கப்படுவன அல்ல` என்பது கூறப்பட்டது. `சத்திதான் பலவோ என்னில், தான் ஒன்றே. அனேகமாக வைத்திடும், காரியத்தால்` என்பது சிவஞான சித்தி.l