ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய
விண்ஆட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின்
கண்நாடி காணும் கருத்ததென் றானே.

English Meaning:
God is Inward Where the Five Sense Controlled Meet

If you ask,
How the Heavenly Space within the cranium is,
Where the inward looking Five abide,
Verily it is,
Like gazing upward into a mirror
(Seeing the self reflected in crystal purity)
At a junction
Where the Five, in control, meet.
Tamil Meaning:
(கண் முதலியனபோல வெளியிலே கண்டறியப் படாமல்) `உள்ளே கருதியறியப்படுகின்ற ஐம்புல ஆசைகளின் களியாட்டம் ஒழிதற் பொருட்டு யோகாவத்தையை நிகழ்த்துதற்குரிய இடங்கள் யாவை என ஆராயின், இருதயத்தினின்றும கீழே நோக்காமல், மேலே நோக்கினால், அந்த ஐம்புல ஆசைகளும் ஒருங்கு கூடி வந்து ஒடுங்கும் இடம் ஒன்று உண்டு. அந்த இடத்திலே நின்று, மேலும் ஆராய்க. அதுவே சிவனைப் புலப்படக் காணும் வழி` என்று எம் ஆசிரியர் நந்திபெருமான் எங்கட்கு அறிவுறுத்தார்.
Special Remark:
`நாடும்` என்றது, `நாடி உணரப்படும்` என்றபடி. குமண்டை - களியாட்டம். ஒதுங்கிய - ஒதுங்குதற்பொருட்டு. விண் - மேலிடம். மேலிடத்தில் ஆடுதலாவது, மேலாலவத்தையில். அஃதாவது யோகா வத்தையில் நிற்றல். `வெளி` என்றது, `இடம்` என்றபடி, ஐவர் கூடும் சந்தி, ஆஞ்ஞை, (புருவ நடு) `நாடி` என்பது இகர ஈற்று ஏவல் வினைமுற்று. இது `நாடுதி` எனத் தகரம் ஊர்ந்து வருதல் பெரும்பான்மை. சிறுபான்மை தகரம் ஊராதும் வரும். காணுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய உபாயத்தைப் பெறுமாறு கூறப்பட்டது.