ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

துரிய நனவாம் இதம்உணர் போதம்
துரியக் கனவாம் அகம்உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியத்
துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.

English Meaning:
Turiya and Its Inner Divisions

Jagrat-In-Turiya
Is (God) Consciousness, external;
Svapna-in-Turiya
Is (God) Consciousness, internal;
Sushupti-In-Turiya
Is Void inexplicable;
Turiya-in-Turiya
Is to vision Param Supreme.
Tamil Meaning:
துரியத்தில் பேருறக்கத்தில் விளைகின்ற மிக்க இன்பத்தினைக் காலத்தொடு ஒட்டி நெடிதுணர்தல் துரியத்தில் சாக்கிரம். அவ்வின்பத்தை உணராது தன்நிலையை உணர்தல் துரியத் தில் சொப்பனம். துரியத்தில் திருவருள் உணர்வு தோன்றல் துரியத்தில் சுழுத்தி. துரியத்தில் திருவருட்கு முதலாகிய சிவத்தை உணர்தல் துரியத் தில் துரியம். (இதனால், சிவத்தில் ஒடுங்கல் துரியத்தில் துரியாதீத மாதல் கொள்ளப்படும்.)
(இவற்றுள், `முதற்கண் கூறிய நிலையே துரியத்தில் துரியம்` என்பதும், அவ்வின்பத்தில் தோய்ந்து, அதுவேயாய்க் கிடத்தலே துரியத்தில் துரியாதீதம்` என்பதும், `பிறவெல்லாம் கீழாலவத்தைக் கண் நிகழா` என்பதுமே சித்தாந்தம்.)
ஏகான்ம வாதிகள், `கீழாலவத்தையில் நிகழும் சுழுத்தியில் சீவன் பிரமமாய்விடும்` எனவும், `அதனால் அங்கு நிகழ்வது பிரமானந்தமே` எனவும் கூறுவர். இம்மந்திரத்திற் கூறிய பூர்வ பக்கமும் அவர்களது கொள்கையோடு ஓராற்றான் ஒத்துள்ளன்.
இனி `இங்குக் கூறப்பட்ட துரியம் பரதுரியமே` எனக் கொள்வாரும் உளர்.
துரியாதீத நிலை இங்குக் கூறப்படாமையால், அதில், `சித் தாந்தத்திற்கு வேறாய்ச் சொல்லப்படுவன இல்லை` என்பதாகின்றது.
Special Remark:
வியோமம் - பரவியோமமம். பூர்வ பக்கங்களையும் உணர்ந்து கழித்தாலன்றிச் சித்தாந்தத்தில் தெளிவு பிறவாது ஆகலான், அதுபற்றி இம்மூன்று மந்திரங்களாலும் கீழாலவத்தை பற்றிய பூர்வ பக்கங்கள் சில கூறப்பட்டன.