ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய்
அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதனுல காதி
இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.

English Meaning:
Immanence of Sakti and Siva

As Life of Life,
As Form and Formless,
As Jiva-Sentience and Knowledge-Divine
All pervasive, He stands;
If Sakti and Siva
In world immanent are not,
Verily, verily, all is inert darkness,
In ignorance entire steeped.
Tamil Meaning:
உலகிற்கு முதல்வனாகிய இறைவன் அறிவுடைப் பொருளாகிய உயிர்களில் அவற்றுக்கு உயிராகியும், அறிவில்லாத உருவமும், அருவமும் ஆகிய பொருள்களில் அவையேயாகியும் இவ்வாறு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் அவை யனைத்தினும் தான் வேறாவதோர் திறம் உடையனாயும், உயிர்களின் அறிவு ஒன்றை அறியுமிடத்துத் தானும் அவ்வாறு அப்பொருளை அறிகின்ற அறிவாய் உடனாயும் `சத்தியும், சிவமும்` என்னும் இரு திறத்தால் இயக்காவிடின் உயிர்கள் முழு மூடங்களாயும், உயிரல் பொருள்கள் சூனியமாயும் ஒழிவனவாம்.
Special Remark:
எனவே, `அவன் அவ்வாறு இயக்குதலானே மேற் கூறிய அவத்தைகள் பலவும் நிகழ்கின்றன.` என்றபடி. இதனானே, இறைவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு அவ்வந் நிலைக்கேற்ற அறிவையும், அனுபவத்தையும் தந்துதவுதல் விளங்கும்.
`உலகிற்கு ஆதி` என உருபு விரித்து அதனை முதற்கண் கூட்டி, `நாதனும் ஆய்` என உம்மையும், ஆக்கச் சொல்லும் வருவித்து உரைக்க. இயற்பு - `நடத்துதல்` எனப் பிறவினை இது, `நடத்தல்` எனத் தன்வினையாயின், `இயல்பு` என நிற்கும். `இருள்` என்றது, `சூனியம்` என்றபடி. சூனியம், இங்கு, இருந்தும் இல்லாமை. `இருள், மூடம்` - என்பவற்றை எதிர் நிரல் நிறையாகக் கொள்க.
இதனால், `ஆன்மாவும், கருவிகளும் கூடிய துணையானே அவத்தைகள் நிகழமாட்டா; இறைவனது திருவருள் உடனாய் நின்று நிகழ்விக்கவே நிகழும்` என்பது கூறப்பட்டது.