ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும்
விதறு படாமூனம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே.

English Meaning:
Give Up Distractions and Take to the True Way

With streaming eyes eighteen
Your thoughts in distraction wander;
Before you tremble in death,
Take to the True Way;
You shall indeed meet
The mighty Lord of your soul.
Tamil Meaning:
துன்பத்தால் அலறிக் கொண்டு, ஒரு வழிபடாது பதினெட்டு வழிகளில் போவதற்குப் பலமுகமாய் எழுகின்ற மனத்தை, நீவிர், நும் வாழ்நாள் முடிவதற்கு முன்னே மெய்ந்நெறியில் நிறுத்தினால், முன் மந்திரத்தில் கூறிய அந்த ஆனைகள் ஐந்தும் நடுங்கும்படி ஒப்பற்ற ஒரு பெரிய யானை உங்கள் அருகில் வந்து உங்களை எடுத்துச் செல்லும்.
Special Remark:
அந்த யானையாவது சிவன். `ஆனையும்` என்னும் உம்மை சிறப்பு யானை, தன் பாகனைத் தானே எடுத்துச் சுமத்தல் போல, அடியார்களைத் தானே வந்து ஆட்கொண்டு அவர்களைத் தாங்கி நிற்றல் பற்றிச் சிவனை, `ஆனை` என்பர் அருளாளர். திருக்கடவூர்த் திருக்குறுந்தொகை ஒரு திருப்பதிகம் முழுவதிலும் சிவபிரானை, `ஆனை, ஆனை` எனப் பலகாலும் கூறினமை காண்க. `எடுத்துச் சுமப்பான்`l என்றார் உமாபதிதேவர். இனி `ஆனை` என்பதை `ஆன் + ஐ` என இருமொழித் தொடராக்கி, `பசுக்கட்குத் தலைவன்` எனப் பொருள் உரைப்பாரும் உளர்.
பதினெட்டு வழிகளாவன. புரியட்டக சரீரத்தில் உள்ள எட்டுக் கருவிகளும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் ஆம். தூல பூதங்கள் தன்மாத்திரைகளில் அடங்கின. அடங்கவே அவற்றின் கூறாகிய தாத்துவிகம் அறுபதும் அவற்றோடு உடன் அடங்கின. எனவே, `சூக்கும தூல சரீரங்களின் வழியே ஆன்மாப் புறத்துச் சென்று அலமரும்` எனக் கூறியவாறாம். கண் - புழை. `கண்களிலும்` என ஏழாவது விரிக்க. அவ்வாறு அலமராது நிற்றற்கு உபாயம் சரியையாதி தவங்களே. அவைகளே இங்கு, `மெய்வழி` எனப்பட்டன. `நின்றால்` என்பது, பிவ்விகுதி தொகுக்கப்பட்ட பிறவினை. சிந்தையை மெய்வழி நிற்பித்தலே நின்மலாவத்தையாம்.
இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் நில்லாது` நின்மலாவத்தையில் செல்லல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.