ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.

English Meaning:
Tattvas and Their Centres of Action During the Five States of Consciousness

Tattvas five and twenty and ten to add,
Are the instruments thirty and five
In Jagrat;
With instruments five and twenty
In the Throat-Centre
Is Dream State;
With there
The Purusha is in Sushupti;
When the two (Purusha and Prana)
The Navel-Centre reaches
Then is the Turiya State true.
Tamil Meaning:
பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளில் முப்பத் தைந்து கருவிகள் மட்டுமே கூடிச் செயற்படுவது கேவல சாக்கிரம். (இதுவும் சகல சாக்கிரம்போலப் புருவநடுவில் நிகழும்` என்பது மேற் பல இடங்களில் கூறப்பட்டது.)
சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும் ஆகப் பன்னிரண்டு தத்துவங்களும் ஆன்மாவை எப்பொழுதும் விட்டுக் நீங்குவன அல்ல, அதனால், `புருடன்` என ஒன்றுபோலக் கூறுமிடம் எல்லாம் அவத்தை பேதத்தில் இப்பன்னிரண்டு தத்துவங்களும் கொள்ளப்படும். `அவற்றுள் முப்பத்தைந்து கருவிகள் மட்டுமே கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்` என்றமையாலும், அவற்றுள் `புருடன்` என்பது, மற்றும் பதினொரு கருவிகள் கூடியது ஆகையாலும், நாற்பத்தாறு கருவிகள் கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்.
கேவலசாக்கிரத்தில் செயற்படும் நாற்பத்தாறு கருவிகளாவன; ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரிய விடய மாகிய சத்தாதி ஐந்து, கன்மேந்திரிய விடயமாகிய வசனாதி ஐந்து, அந்தக் கரணம் நான்கு, புருடன் ஒன்று, பிரணாதி வாயுக்கள் பத்து என்பன, ``புருடன்` என்பது பன்னிரண்டு கருவிகளை அடக்கியது - என்பது மேலே கூறப்பட்டது.
ஆன்மா புருவ மத்தியிலே நிற்பினும் தொண்ணூற்றாறு கருவிகளும் செயற்படின் சகல சாக்கிரமும், அவற்றுள் ஐம்பது கருவிகள் நீங்க, கேவல சாக்கிரமும் நிகழும் என்க.
சகல சாக்கிரத்தில் ஆன்மா புலன்களை அறிவதில் தீவிரமாய், நன்குணர்ந்து நிற்கும். கேவல சாக்கிரத்தில் ஆன்மாப் புலன்களை அறிந்தும் அறியாதது போன்ற மந்த உணர்வு உடையதாய் இருக்கும். இவை அவ்விரு சாக்கிரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு.
முப்பத்தைந்து கருவிகளில் ஞானேந்திரியம் ஐந்தும், கன் மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்துக் கருவிகள் நீங்க, ஏனை இருபத் -தைந்து கருவிகள் மட்டும் செயற்படுவது கேவல சொப்பனம். இந்நிலையில் ஆன்மாக் கண்டத் தானத்தில் நிற்கும். கைகண்ட - சாக்கிரத்தில் நன்கு துய்க்கப்பட்ட.
அவ்விருபத்தைந்தில் சித்தம், பிராணன், புருடன் - ஆகிய மூன்று கருவிகள் மட்டுமே செயற்படுவது கேவல சுழுத்தி. (பொய் என்றது ஐம்புலன்களை. `சுழுனையில் பொய்கண்ட மூவர் உளர்` என இயைத்துக் கொள்க. `இவருள் புருடனும் ஒருவன்` என்பதாம்.) `சுழுத்தி நிகழும் இடம் இருதயம்` என்க.
பொருள்களை உணரும் ஆற்றல் உடைய புருடன் இரு -தயத்தை விட்டு உந்தியை அடைந்தால் அந்நிலை கேவல துரியமாம். அப்பொழுது பிராணன் மட்டுமே உளதாக இருவரே இருப்பர். (இரு கருவிகள் மட்டுமே அவ்விடத்தில் செயற்படும்` என்றபடி.) இங்குப் புருட தத்துவத்தையே உயிராக உபசரித்தார். `உந்தி மேவில்` என்றதனால் முன்பு இருதயத்தில் நின்றமை பெறப்பட்டது.
Special Remark:
உந்திக்குகீழ் உள்ளது மூலாதாரமே. ஆதலால், `புருடனோடு உடன் இருந்த ஒரு கருவியாகிய பிராணனும் நீங்க, புருடன் ஒருவனும் மூலாதாரத்தை அடைந்தால் கேவல துரியா தீதம் நிகழும் - என்பது குறிப்பால் விளங்கிற்று.
கீழாலவத்தைகளில் செயற்படும் கருவிகளை, `தொகைக் குறிப்பு` - என்னும் குறிப்பு வகையால் மரபு பற்றி உணர்த்தினார். என்க.
இதனால், `கீழாலவத்தைகட்கு உரிய கருவிகள் இவை` என்பது கூறப்பட்டது.