ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.

English Meaning:
Bindu Power Permeates Tattvas

The gross body of Waking State,
The subtle body of Dream State,
Together with Tattvas five and twenty
Are of Bindu`s Power verily;
That Power permeating Jiva
Penetrates the Waking and Dream States.
Tamil Meaning:
கீழாலவத்தையாய் யாவராலும் நன்கு உணர நிகழும் கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் போல்வனவே, நுண்ணறி வுடையோரால் மட்டும் ஊன்றியுணரப் படுகின்ற மத்தியாலவத்தை யாகிய சகல சாக்கிரம் முதலிய ஐந்தும். அந்த ஈரைந்து அவத்தை களிலும் உள்ள இருபத்தைந்து தத்துவங்களும் சுத்த மாயையிலும் உள்ளன. (யோகாவத்தையில் அவை செயற்படும்) அவைகளி னின்றும் உயிர் தனது உணர்வு விடுபட்டுச் சென்று, திருவருளில் முன் பெல்லாம் தான் கண்டு வந்த கனவு போல உணரப்படுகின்ற காட்சியில் தோய்கின்ற நிலையே சுத்த சாக்கிரம் முதலிய சுத்தாவத்தைகளாம்.
Special Remark:
`கேவல ஐந்தவத்தைகளை உவமையாகப் பற்றிச் சகல ஐந்தவத்தைகளின் உண்மையை உணர்தல் போல, அவ்விரண்டையும் உவமையாகப் பறஅறிச் சுத்த ஐத்தவத்தைகளின் உண்மையை உணர்ந்து கொள்ளல் வேண்டும்` - எனவும்,
பிரகிருதி மாயை, அசுத்த மாயை இவற்றின் தொடர்பு கீழாலவத்தை மத்தியாலவத்தைகளோடு ஒழிய, யோகாவத்தையில் சுத்த மாயையின் தொடர்பு மட்டுமே உளதாம்` - எனவும்,
`அந்தச் சுத்தமாயைத் தொடர்பும் நீங்கித் திருவருள் பற்றாக நிகழ்வனவே சுத்தாவத்தைகள்` - எனவும் கூறியவாறு. யோகாவத்தை களின் உண்மை யோக நூல்களால் விளங்கும்.
`இங்கு, `சுத்தம்` எனப்படுவது உடம்போடு கூடி நிற்கும் பொழுதே திருவருள் வயப்பட்டு நிற்பது ஆகலின், இது சகலத்திற் சுத்தமே, `தனியான சுத்தம் வேறு உண்டு` என்பது மேலேயும் குறிக்கப்பட்டது. `அசுத்த மாயையில் உள்ள தத்துவங்களைப் போல சுத்த மாயையும் அவ்வகைத் தத்துவங்கள் உள்ளன என்பது சிவாகமங் களின் துணிபு` என்பதைச் சிவஞானமாபாடியம் முதலியவற்றால் உணர்க.
`அன்ன` - என்பது இடைக்குறைந்து நின்றது. `அன்னவற்றில் ஆன` என உருபுவிரித்து, `விந்து சத்தியில் உள்ளன` என முடிக்க. `இன்` வேண்டாவழிச் சாரியை, `உயிர்` என்றது அதன் உணர்வை, `கலந்ததும் இவ்வாறே` - என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. `இவ்வாறு` எனச் சுட்டியது, முன்னர், `தூலம், சூக்கம்` என்றவற்றை.
இதனால், மேல், `சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும் என்னும் மந்திரத்தில் பொதுவாகச் சுட்டிப்போந்த சுத்தாவத்தைகளின் உண்மை தெளிவிக்கப்பட்டது.