ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்

பதிகங்கள்

Photo

ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும்
ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென் றறியும் அறிவை யறிந்தபின்
ஈதென் றறியும் இயல்புடை யோனே.

English Meaning:
New Knowledge

This I knew not,
All these days;
This when I know,
Nothing else I knew;
When I knew,
This the Truth
Then I Knew I am It.
Tamil Meaning:
(சுருதியும், குரு மொழியும் ``ஒன்று அவன்தானே`` என்றபடி,* `தன்னோடு ஒப்பவைத்து எண்ணுதற்கு மற்றொரு பொருள் இன்றித் தான்ஒன்றேயாய தனிமுதற் பொருள் ஒன்று உண்டு` என வலியுறுத்திக் கூறுகின்ற அப்பொருளை) மத்தியாலவத்தை கீழா லவத்தைகளில் மட்டுமே அகப்பட்டு உழன்ற இவ்வளவு காலமும், `இது` என்று நான் உணரவில்லை (யோகாவத்தையை அடைந்த பொழுது அதனைச் சிறிதே உணர்ந்தேன்.) நின்மலாவத்தையை அடைந்தபின் அதனைத் தெளிவாக உணர்ந்தேன். அதனை அவ் வாறுணர்ந்த பின் பிறிதொன்றையும் அரிய முயல்கின்றிலேன். (`அதனையே அறிந்து நின்றேன்` என்பதாம்.) அவ்வாறு அதனை உணரும் உணர்வை எய்திய பின்புதான் நான் மெய்யுணர் வுடையேனாயினேன்.
Special Remark:
அவத்தைகளே அதிகாரப்பட்டு வருதலால் `இத்தனைக் காலமும்`-என்றது பயன்படாத அவத்தையிற் கிடந்த காலத்தையே குறித்தது. ஆகவே, அறிந்த காலம் பயன்படும் அவத்தை நிகழ்ந்த காலம் ஆயிற்று. `அறிந்தபின்` - என்ற அனுவாதத்தால், அறிந்தமை தானே பெறப்பட்டது. அறியற்பாலதாய பொருளை அறிவதே அறிவாதலின், அங்ஙனம் அறியும் பொழுதே அறிவராந் தன்மையை மக்கள் பெறுதல் பற்றி, ``அறியும் இயல்புடையேன்`` என்றார். `உடையேன்` என்னும் ஆக்கவினைக்குறிப்பில் ஆக்கச் சொல் தொக்கு நின்றது. அடைதலே அறிவிற்குப் பயன் ஆதலின், `அறிந்தபின்` என்றது, `பெற்றபின்` என்றதேயாம்.
ஞாயிற்றின் ஒளியால் இருள்நீங்கிப் பொருள்களைக் காண் கின்ற கண் அவ்வொளியால் ஞாயிற்றையே நோக்கியவழி அதற்கு அந்த ஞாயிறன்றிப் பிறிதொரு பொருள் தோன்றாதவாறு போல, முதல்வனது அருளால் மலம் நீங்கிப் பொருளியல்புகளை உள்ளவாறு உணர்ந்துவரும் உணர்வு, அம்முதல்வனையே உணர்ந்தவழி அவ்வுணர்விற்குப் பிறிதொருபொருள் புலனாகாது` என்பதே, ``ஈதென்றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்`` என்பதனால் கூறப்பட்டது.
இதனால், அவத்தைகளின் பயன்கள் அனுபவ முறையால் கூறப்பட்டது.