ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின்
ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே.

English Meaning:
The Journey from Kevala to Suddha Through Sakala States
Helped by Siva as Father, Maya (Pure) as
Mother and Mamaya (Impure) as Nurse

Parasiva for father;
Maya (Pure) for mother;
Mamaya (Impure) for nurse;
Thus does Jiva
Its birth take,
And journeying the states of Kevala, and Sakala
Final reaches the Suddha State.
Tamil Meaning:
சிவனே எல்லாம் செய்பவன் ஆகையால், உலக மாகிய மகவிற்கு அவனை, `தந்தை` எனலாம். உலகிற்கு முதற் காரணமான `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளுள் சுத்த மாயையையே சிவன் தான் நேரே பற்றிச் செயற்படுத்துதலால் அதனைச் சிவனோடு புணர்ந்து உலகமாகிய மகவை ஈன்ற, `நற்றாய்` எனலாம்; அசுத்த மாயையைச் சிவன் தான் நேரே பற்றிச் செயற் படுத்தாமல், அனந்த தேவரைக் கொண்டும், அவர்வழியாகச் சீகண்ட உருத்திரரைக் கொண்டும் செயற்படுத்துதலால் அதனை, உலகமாகிய மகவை வளர்க்கும் `செவிலித் தாய்` எனலாம். எனவே, சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு முதற் காரணங்களாலும், சிவனாகிய கருத்தாவினாலும் உலகம் தோன்றி நிலை பெற, உயிர்கள் அவ் வுலகத்தைப் பற்றி நின்று, `சகலம், கேவலம்` என்னும் இருநிலைகளில் மாறி மாறி உழன்று, முடிவில் சிவனது அருளாலே ஞானத்தைப் பெற்று, அவற்றினினின்றும் விடுதலை அடைந்து சுத்த நிலையை அடையும்.
Special Remark:
செவிலி முதலியோரைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். உலகமாகிய மகவை எடுத்துக் கூறாமையால் அது. `தந்தை, நற்றாய், செவிலி` என்பவற்றால் பெறப்பட்ட குறிப்புருவகமாகும். உயிரை, `தான்` என்றது சாதி யொருமை. இங்ஙனம் மகவாக உருவகிக்கப்பட்டவை, `சேதனம், அசேதனம்` என்னும் இருவகைப் பிரபஞ்சமுமாகும். சேதனப் பிரபஞ்சங்கள் அறிவைப் பெறுதலும், அசேதனப் பிரபஞ்சம் பல்வேறு வகையான தன்மைகளைப் பெறுதலும் இங்குக் குறிக்கப்பட்ட மூவராலுமாம் என்க. சுத்த மாயை சகலர் பிரளயாகலர்கட்குப் பிரேரகமாத்திரையாயும், நால்வகை வாக்குக்களாயும் பயன்படும். அஃது அவர்கட்குத் தனு கரண புவன போகங்களாய் வருதல் இல்லை. விஞ்ஞானகலர்க்கு மட்டுமே சுத்தமாயை தனு கரண புவன போகங்களாய் வந்து பயன்படும்.
சுத்தமாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனறும், அசுத்த மாயையே, `மாயை` எனப்படுதலால், அதன் காரியங்கள், `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும். எனினும், பிரகிருதியும் அசுத்த மாயையின் காரியம் ஆதல் பற்றி பிராகிருதங்களையும், `மாயேயம்` என அடக்கிச் சொல்லுதல் உண்டு.
``வித்தைகள், வித்தை யீசர், சதாசிவர் என் றிவர்க்கு
வைத்துறும் பதங்கள், வன்னம், புவனங்கள், மந்திரங்கள்
தத்துவம், சரீரம், போகம், கரணங்கள் தாம் எலாமும்
உய்த்திடும் வைந்தவந்தான் உபாதான மாகி நின்றே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக. இதனுள் `விந்து` என்பதே பகுதிப் பொருட்டாகிய விகுதியைப் பெற்று, `வைந்தவம்` என வந்தது. பகுதிப் பொருள் விகுதியை வட நூலார் `சுவார்த்த பாவ தத்திதப் பிரத்தியயம்` என்பர்.
இதனால், உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள் ஆமாற்றை விளக்கி, அதனாலே காரண அவத்தைகள் மூன்றும் நிகழ்தலைத் தெரிவித்து, அதிகாரம் முடிக்கப்பட்டது.