ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.

English Meaning:
Involution of Tattvas Further Explained

The Tattvas five times five of Purusha1
Into the Six (Vidya Tattvas) involute;
They into the three Siva Tattvas2 higher above involute,
Who in turn merges into Sakti (Bindu)
Who with Siva (Nada) stands;
—Thus is the ultimate of involution reached
Into Tattvas seven and four3.
Tamil Meaning:
(மேல், `நாலாறுடன் புருடன்` - என்னும் மந்திரத்தில் `வேதாந்தி தத்துவம்`-எனக் கூறப்பட்ட இருபத்தெட்டுத் தத்துவங்களில்) ஒடுக்க முறையில் முதல் இருபத்தைந்து தத்துவங்கள் சீவனில் அடங்கும். இருபத்தாறாம் தத்துவமாகிய ஈசுரன் உட்பட மற்றைய மூன்று தத்துவங்களும் மெயப்பொருளாகிய பரப்பிரமத்தில் சீவன் ஒன்றாகும் பொழுது அதில் அடங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், `விவகாரத்திற்குக் காரண சத்தியாகிய மாயை, அதற்கு அதிட்டானமாம் பாரமார்த்திகப் பொருளாகிய பரப்பிரமம் என்னும் அவ்விரண்டிலே எல்லாம் தோன்றுதலால், எல்லாம் ஒடுங்குதலும் அவற்றிலேதான்` எனலாம்.
Special Remark:
`இது வேதாந்தி கொள்கை` என்பதாம். `ஐயைந்தும் ஆன்மாவில்` என்று, `ஐயைந்தாவன ஆன்மா உட்பட` என்றபடி, ``அடங்கிடும்`` என்பது `ஆன்மாவில்` என்பதனோடும் சென்றியைந் -தது. `மெய்யாகக் கண்ட` என ஆக்கம் வருவிக்க. `மேவும் மெய் யோகத்தில்` என்றாரேனும் `மெய் யோகம் மேவுகையில்` என்றலே கருத்து. மேவுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. காண - காணுதல். காணுதல் - தோன்றுதல். எய்யும்படி - அறியும்படி. `எய்யும் படி காணுதலால் நாலேழ் அவற்றில் எய்தி அடங்கும்` எனக் கூட்டி முடிக்க. `நாலேழும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அவற்றில் அடங்கும் எனச் கூட்டியுரைக்க.
இதனால், தத்துவங்களின் தோற்ற ஒடுக்க முறைகளை வேதாந்திகள் சித்தாந்தத்தின் வேறுபடக் கூறுமாறு உணர்த்தப்பட்டது.