ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

எய்திய பெத்தமும் முத்தியும் என்பன
எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு)
`எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே
எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.

English Meaning:
Lord`s Play Takes Jiva To God-Knowledge

The states of Bondage and Liberation
Of Hara`s Grace, they come
It is His play
To take Jiva to Suddha goal;
That it might God-Knowledge receive.
Tamil Meaning:
உயிர்கள் அனாதியே அடைந்துள்ள பெத்த நிலையும், பின்பு முடிவில் அடையும் முத்தி நிலையும் சிவன் தனக்கு ஒரு விளையாட்டைப் போல மிக எளிதிற் செய்யும் அருட்செயலே யாகும். `அச்செயல்களில் அகப்பட்டு வருகின்ற உயிர்கள், இறுதியில் மாசு நீங்கிய நிலையில் இடப்படும்` என்று சொல்லப்படுவதால், அந்நிலையில் அவை சிவனையே அடைந்திருக்கும். அப்பொழுது அவை அறிவே முடிவாய் இருக்கும்.
Special Remark:
`விளையாட்டு` என்றது, விளையாட்டுப் போல் வதனைக் குறித்தது. ஒடுருபை ஆல் உருபாகத் திரித்து, `எய்தும் அருள்` என முன்னே கூட்டி முடிக்க. அருளால் நிகழவனவற்றை அருளாகவே உபசரித்துக் கூறினார். `எய்திடு உயிர் நெறியானே சுத்தத்து இடும் என்னவே` எனக் கூட்டுக. இடும் - இடப்படும். என்ன - என்று சொல்லப்படுதலால். `அறிவாம்` என்றதனால், முன்பு அறியாமையாய் இருந்தமை பெறப்படும்.
இதனால், `எல்லாம் சிவனது அருளேயாதலின் அவ்வருள், முடிவில் சிவனையே அடைவிக்கும்` என்பதும், `அந்நிலை அறிவு நிலை` என்பதும் கூறப்பட்டன. `அறிவு நிலை` என்றதனால் `ஆனந்த நிலை` என்பது சொல்லாமலே அமைந்தது.