ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு)
ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர்
தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.

English Meaning:
Suddha or Pure State

Of them,
Those who receive Siva`s Grace
From Anava mala get liberated;
Transcending the states of Bindu (light) and Nada (sound)
As Aum (Pranava) they become;
And in Siva Pure they merge;
That verily is the Suddha (Pure) State (Avasta):

Tamil Meaning:
மேல், `ஒருமலம் உடையார்` எனக் கூறப்பட்ட -வர்களில், பெறுதற்கரிய சிவனது திருவருளை நிரம்பப் பெற்ற சிலர் அதிகார மல வாசனை, போக மல வாசனை ஆகியவைகள் நீங்கப் பெற்று, இலய மல வாசனை மட்டுமே உடையவர் ஆவர். ஆகவே, அவர்கள் மலம் முற்றும் நீங்கிய முத்தர்களாகவே கருதப்படுவர். (அதனால் அவர்கட்குக் கேவல நிலை உள்ளதாகவும் கருதுதல் கூடாது. அவர்கள் வாழ்வது அபர விந்து அபர நாதங்களைக் கடந்த பரவிந்து பர நாதங்களிலாம். ஆகவே, அவர்கள் சூக்குமை வாக்கு ஒன்றை மட்டுமே உடையவர் ஆவர். அவ்வாற்றால் அவர்கள், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவராகக் கருதப்படுவர்.
Special Remark:
`போம்மலந் தன்னால்` என்றது, `மலம் போயதனால்` என்றபடி, மலம் இங்கு மல வாசனை. போயவை அதிகார மல வாசனை, போக மல வாசனைகளே. அஃது, ``ஓம் மயமாகி`` என்றத னாலும், ``ஒடுங்கலின்` என்றதனாலும் விளங்கும். ஒடுங்கல். இலய நிலையில் நிற்றல். அதனுள்ளும் இங்கு கூறப்பட்டது சூக்கும இலய நிலையே. அதனால், `விந்து, நாதம்` என்பன அபர `விந்து, அபர நாதங்களே ஆயின. இங்ஙனமாகவே, `அபர முத்தர்கள்` என்னும் பெயர் இந்நிலையில் நின்றோர்கட்கு பெரிதும் பொருந் துவதாம். `அணு சதாசிவர்கள்` என்னும் பெயரும் போக மலம் உடையவர்கட்கே பொருந்துவது. அவர்கள் சாதாக்கிய தத்துவத்தில் போகங்களை நுகர்ந்து கொண்டிருப்பர். தோம் - குற்றம்; மலம். `இவர் தொழில்` என ஒரு சொல் வருவித்து `தோம் அறு சுத்தாவத்தையே` என ஏகாரத்தை மாறிக் கூட்டி முடிக்க. ஏகாரம் - பிரிநிலை.
இதனால், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவரது இயல்பு கூறப்பட்டது.