ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

English Meaning:
Involution of Tattvas After Jiva Reaches Suddha State

The Tattvas five times five
Will into the Soul involute;
The Soul, having realized Suddha State,
Will in Suddha Vidya Tattva merge;
The first three of this category
(Suddha Vidya, Isvaram and Sadakyam)
Will in Sakti involute;
Beyond the Sakti is Siva
(Of the Siva Tattva)
Thus involuting, the Soul returns to the Beginning;
This the order (in reverse of evoluting too)

Tamil Meaning:
நிலம் முதல் பிரகிருதி ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் சகல வருக்கத்து ஆன்மாக்கட்குப் பரமாய் உள்ள சீகண்ட உருத்திரரிடத்தில் ஒடுங்கும் (இது பற்றியே இவை, `ஆன்ம தத்துவம்` எனப் பெயர் பெற்றன. ஒடுக்கம் கூறுதலால் காரணமாய் உள்ள பிரகிருதியையும் கூட்டி `இருபத்தைந்து` என்றார்.)
அந்தச் சீகண்ட உருத்திரரும், `தமக்கு` தனு கரணம் முதலியன வாய் வருவன அசுத்த மாயையே` என்னும் உண்மையை உணர்ந்து அவற்றின் நீங்கிச் சுத்த வித்தையில் வீடு பெறுவார். (எனவே, `அசுத்த மாயா காரியங்களாகிய வித்தியா தத்துவங்கள் அந்தச் சுத்த வித்தைக்குத் தலைவராகிய அனந்த தேவரிடத்தில் ஒடுங்கும்` என்பது தானே பெறப்பட்டது.)
இனி, அந்தச் சுத்த வித்தை முதலாக ஒடுக்க முறையில் நிற்கும் முதல் மூன்று தத்துவங்களும், `சத்தி` எனப்பெயர் பெற்று நிற்கும் இலய சிவனிடத்தில் ஒடுங்கும். சிவ தத்துவம் ஐந்தில் எஞ்சிநின்ற `சத்தி, சிவம்` என்னும் இருதத்துவங்களும் முடிநிலைப் பேறாய் உள்ள சுத்த சிவனிடத்தில் ஒடுங்கும். இவை யெல்லாம் மீளத் தோன்றுங்கால் இம்முறையானே தோன்றும்.
Special Remark:
`ஆன்மா` என்பது, ஏற்புழிக் கோடலால், `சகல வருக்கத்து ஆன்மா` எனப் பொருள் தந்தது. அவைகட்குப் பரமா யுள்ள கடவுளை அவ்வான்மாக்களாக உபசரித்துக் கூறினார். `ஆன்மாவும்` - என்னும் உம்மை சிறப்பும்மை. சுத்த சிவன், `இலயம், போகம், அதிகாரம்` - என்னும் நிலைகளில் நிற்குங்கால் முறையே, சத்தன், `உத்தியுத்தன், பிரவிருத்தன்`-எனப் பெயர் பெறுதலை நினைக. சத்தன் - சத்தியை உடையவன். எனவே, சத்தியை உடை யவனை, `சத்தி` - என ஆகுபெயரால் கூறியதாயிற்று. `ஐயை - சத்தி. `சித்தி` என்றது, `முடிநிலைப் பேறு` என்னும் பொருட்டாய் நின்றது. இப்பொருளை, `தத்துவம் எண்மூன்றும் சென்று ஆன்மா தத்துவத் தொடுங்கும்` என்னும் சிவஞான சித்திச் செய்யுட்கு8 மாதவச் சிவஞான யோகிகள் உரைத்த உரை பற்றித் தெளிக.
சீகண்ட உருத்திரருக்கு ஒடுக்கங் கூறிய அதனானே, சகல வருக்கத்தினரான `அயன், மால்` என்பவரில், `அயன் மாலிடத்திலும், மால் சீகண்ட உருத்த்திரரிடத்திலும் ஒடுங்குவர்` - என்பதும், `வித் -தியேசுரர் மகேசுரனிடத்திலும் மகேசுரன் சதா சிவனிடத்திலும், சதா சிவன் `சத்தி` என நிற்கும் இலயசிவனிடத்திலும், `சத்தி` என்னும் சிவன், `சிவன்` என்றே பெயர்பெற்று நிற்கும் சிவனிடத்திலும் அந்தச் சிவன் சுத்த சிவனிடத்திலும் ஒடுங்குவர் என்பதும் பெறப்படும். இவற்றால், `சகலத்தில் நிகழும் சுத்த சாக்கிரம்` எனப்படும் தத்துவ சுத்தி ஒன்றே, `நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளின் அடங்கிய தத்துவங் -களினின்றும் முறையே நீங்குதலே, சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத் தில் சொப்பனம் முதலான பஞ்சாவத்தைகளாய் நிகழும்` என்பதும் உய்த்துணரவைத்தமை அறிந்துகொள்க.
இதனால், `அவத்தைக்கு ஏதுவாவன தத்துவங்களே` என்பது பற்றி அவற்றின் ஒடுக்கத் தோற்றமுறைகள் கூறப்பட்டன.