ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

இருவினை ஒத்திட இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக்
குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

English Meaning:
Sakala Jiva`s Journey to Suddha State

They reach the State
When deeds good and bad
Equable become (Iruvinai Oppu);
When Sakti`s Grace
On them descends (Sathini Padam);
When on the pedestal of Grace
They thus get seated,
Then with the aid of Guru Holy
They reach the Presence of Sakti`s Grace;
Finally rid of the Primordial Mala (Anava)
They reach the State of Suddha
That no birth thereafter gives.
Tamil Meaning:
உயிர்கள் தமக்கு இருவினையொப்பு வாய்க்கப் பெற்ற பொழுது சிவனது சத்தி முன்பு பிறவித் துன்பத்தைத் தரும் திரோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, வீட்டின்பத்தைத் தரும் அருட்சத்தியாகித் தங்கள் அறிவில் பதியப் பெற்று, அதனானே மெய்யுணர்வு வேட்கை நிலைத்து நிற்க அவ்வேட்கை மிகுதியால் ஞான குருவை அடைந்து அவர் உபதேசித்த முறைப்படி தம்மைச் சிவனது அருட்சத்தியின் வழிப்படுத்திக் கொண்டு, அதனாலே எல்லா மலங்களும் நீங்கப் பெற்று, மீட்டும் பிறவா நிலையில் நிற்பதே சுத்தாவத்தையாம்.
Special Remark:
கேவல நிலையில் இருந்த உயிர்கள் சகல நிலையை அடைந்த பின்பு அதன்கண் பல்வேறு பிறப்புக்களை எய்தி, வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும். அப்பொழுது நல்வினைப் பயன்களில் விருப்பமும், தீவினைப் பயன்களில் வெறுப்பும் கொண்டு, நல்வினைப் பயன்களை விரைவில் எய்தவும், எய்திய வழி நீங்காது நிறுத்திக் கொள்ளவும், தீவினைப் பயன்களை எய்தாது தடுக்கவும், எய்தியவழி விரைவில் அகற்றவும் முயலும், அம்முயற்சியே அவற்றிற்குப் பின்னைப் பிறவி கட்குக் காரணமாய் அமையும். ஆகவே, `நல்வினையும் தீவினை போலப் பிறப்பைத் தருவதே` என உணர்ந்து, `விலங்கு பொன்னால் இயன்றதாயினும், இரும்பால் இயன்றதாயினும் விலங்கயேன்றி வேறன்று` என்பதுபோல, இருவகை வினைகளையும் தளைகளாகவே உணர்ந்து, விருப்பு வெறுப்பின்றி இரண்டையும் சமமாக நோக்கும் பக்குவ நிலையே இருவினை யொப்பாகும். அத்தகைய நோக்கு உண்டாயின், மேலும் மேலும் வினை ஏறுதல் நீங்கும். அந்நிலையில் என்றுமே உயிரினது அறிவில் ஒன்றி நிற்கின்ற சிவனது சத்தி, முன்பு திதோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, அருட்சத்தியாகிப் பதியும். அதுவே சத்தி நிபாதம். சத்தி நிபாதத்தால் `வினைகளே பிறப்பிற்குக் காரணம்` - என்பதை உணர்ந்து, உயிர் வினைக்கு அஞ்சும். அவ்வஞ்சுதல், பிறவிக்கு அஞ்சுதலேயாகும். இங்ஙனம் பிறவிக்கு அஞ்சும் உயிர், பிறவி நீங்கும் வழியை உணர்த்துவாரையே நாடி ஓடும். அவ்வாறு ஓடுதலே ஞான வேட்கையாகும். இந்த ஞானவேட்கையே சத்தி நிபாதத்தின் பயன். அவ்வேட்கை நீங்காது நிலைக்கப் பெற்ற உயிர்களின் முன் சிவன், ஞானியராகிய ஆசான் மூர்த்திகளை அதிட்டித்து நின்று, ஞானத்தை உணர்த்துவன். அவ்வாறு உணர்த்த உணர்ந்த உயிர், அஞ்ஞானம் நீங்கப் பெற்றுச் சிவனை அடைந்து, அவனைப் போலவே பிறவாமை யுடையதாய் அவனது இன்பத்தில் திளைத்திருக்கும். அவ்வாறு திளைத்திருத்தலே சுத்தாவத்தை. இவையே இம்மந்திரத்தில் முறையாகக் கூறப்பட்டன.
அருட்சத்தியை, `இன்னருட்சத்தி` என்றதனால், திரோதான சத்தி இன்னாமைச் சத்தியாதல் விளங்கிற்று. ஆதரம் - விருப்பம். சத்தி நிபாதம் வாயாத முன்பும் இடையிடையேயும் ஓரொரு கால் ஞானவேட்கை நிகழுமாயினும் அது, துயில் எழாதவன் துயிலின் இடையிலே சிறிது சிறிது விழிப்பை அடைதல்போல, நிலைத்தல் இன்றி விரைய நீங்குவதாக, சத்தி நிபாதத்தின் பின் உண்டாகும் ஞான வேட்கையே நிலையுடைய உண்மை ஞான வேட்கையாம்` என்பது உணர்த்துதற்கு, `ஞான ஆதரம் மன்னி` என்றார். சக்தி நிபாதம் வாய்க்கப் பெறாதவரது ஞான வேட்கையையே திருவள்ளுவர், `தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்` என்றார்.3 `கூட்டி என்றது, தானே தன்னை அருட்சத்தி வழியில் சேர்த்தி` என்றபடி.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு முறைப்பட இனிது விளக்கப்பட்டது. இந்நிலை சிவஞான சித்தியிலும் இவ்வாறே,
``இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்தி தோயக்
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டை சிற்றறி வொழிந்து ஞானம்
பெறுகிநா யகன்றன் பாதம் பெறுவது சுத்த மாமே``*
எனக் கூறப்படுதல் காண்க.