ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

அரன்முத லாக அறிவோர் அதீதத்தர்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக்
கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர்
அருளும் மறைவார் சகலத்துற் றாரே.

English Meaning:
Malas Restated

The Jiva in Atita State;
Realizes Primal Para;
The Jiva in Turiya stands in Maya (Suddha),
That has its beginning in Hara;
In Sushupti Karma Mala comes in;
In Dream State Mamaya (Asuddha) envelops,
In Waking State comes Tirodhayi, that obfuscates
Thus the Jiva in Sakala State stands.
Tamil Meaning:
`ஆணவம் அதீதத்தில் பற்றும்` என முன் மந்திரத்தில் கூறினமையால், அந்நிலையை மட்டும் உடையராய் அதிலே நிற்பவர்கள், `சிவபெருமான் முதல்வன்` என உணரும் உணர்வை இழவார். (இவர்கள் விஞ்ஞான கலரே.)
`மாயா தத்துவம் துரியத்தில் வந்து பற்றும்` என்றும், `வித்தியா தத்துவங்களில் காலமும், நியதியும் வந்து பற்றும்` என்றும் முன் மந்திரத்தில் கூறினமையால், அந்த இரண்டில் நிற்பவர்களும் மேற் கூறப்பட்டவர்போல, `சிவபெருமானே முதல்வன்` என்னும் உணர்வை இழத்தல் இல்லை. (இவர்கள் இருதிறத்தினரும் தம்முட் சிறிது வேறுபாடுடைய பிரளயாகலரே. இவர்களில் பின்னவர் புருட தத்துவத்திற்குச் சிறப்பு ஏதுவாய் நிற்கும் கலை, வித்தை, அராகங்களைப் பொதுமையாக அன்றிச் சிறப்பாக உடையராகார் என்பது நாயனார் கருத்து - என்க. `கருவில் அதீதம்` என்னும் மந்திரத்திற் கூறியவற்றிற்கும், அடுத்து முன் மந்திரத்திற் கூறிய வற்றிற்கும் சிறிது வேறுபாடு உண்டென்க.)
`கலை முதலிய ஏனை எல்லாத் தத்துவங்களும் சொப்பனத்தில் வந்து பற்றும்` - என்று முன் மந்திரத்தில் கூறப் பட்டமையால், அவர்கள், `தமக்கொரு தலைவன் உளன்` என்பதையே அறியார். இவர்கள் சகல வருக்கத்தினரே.
Special Remark:
சொப்பன நிலைதானே இத்தன்மையதாகலின், சாக்கிரநிலை இத்தன்மையதாதல் சொல்லவேண்டாவாயிற்று.
இறுதியில் `சகலத்துற்றார்` எனக் கூறியதனால், மேற் சொல்லப்பட்டவர்கள் விஞ்ஞானகலரும், பிரளயாகலருமாதல் விளங்கிற்று. அவத்தைகளைக் கூறியது பற்றி, அவற்றில் வந்து பற்றும் மலங்களையும், மலங்களைக் கூறியது பற்றி அவை வந்து பற்றும் அவத்தைகளையும் முன் மந்திரம் பற்றி உயத்துணர வைத்தார். `அருளும்` என்ற உம்மை, முதல்வனைப் பொதுப்பட உணரும் உணர்வும் இலராதலைக் குறித்தது.
இம் மந்திரத்தில் பாடம் பலவிடத்துத் திரிவுபட்டுள்ளது.
இதனால், மூவகை உயிர்கள் அடையும் அவத்தைகளின் கூடுதல் குறைவுகள் கூறும் முகத்தால் அவற்றின் பாச நிலைகள் கூறப்பட்டன.