ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று)
எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி
மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு)
எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.

English Meaning:
When is Suddha State Reached?

Abandoning the illusory Tattvas
Six times six;
Rid of ignorance
The Jiva becomes Siva Himself;
And pervading all Creation
He enters the Void true;
This the Suddha State,
That of himself the Jiva reaches.
Tamil Meaning:
உண்மையான சுத்தாவத்தையாவது, விபரீத ஞானத்தையே தருகின்றவைகளாகிய கருவிகள் முப்பத்தாறினின்றும் விடுபட்டு அப்பாற்போய், அங்ஙனம் போயதனால் அறியா -மையையே தருவதாகிய ஆணவமலம் வந்து பற்றுதலாகிய அந் நிலையும் தோன்றாதொழிய, யாதொன்றனையும் உண்மையாகவே அறியும் அறிவை யுடையவனாய், அந்த அறிவால் சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஒருகாலத்திலே ஒருங்கே உணரும் நிலையை உடையனாய், அத்தன்மைத்தாய் விளங்கும் பராகாயமாகிய அருள் வெளியுட் பகுந்து, அவ்வெளிக்குள் உள்ள சிவனை, அடையாமல் அடைந்திருப்பதாகும்.
Special Remark:
போதம் - அறிவு. `பொய்` என்றது விபரீதத்தை. போதம் தருவனவற்றை, `போதம்` என்றார். எய்யாமை - அறியாமை. `எய் யாமையே அறியா மையே` என்பது தொல்காப்பியம்.l எய்யாமைக்கு எதிராக `எய்தல்` என்றோ, `எய்த்தல்` என்றோ ஒரு சொல் அக்காலத்தில் இல்லையாயினும் இங்கு நாயனார் `அறிகின்ற அத்தன்மையுடையவன்` என்னும் பொருளில், `எய்யவன்` என்றார். மெய் - பொருள். `மெய்யாம் வெளி` என இயைத்தலும் ஆம். சராசரங்களும் தானாதல், அவற்றை ஒரு காலத்தே ஒருங்கே உணர்ந்து நிற்றல். எய்தாமல் எய்தல், புதுவதாய்ச் சென்று அடையாமல் அநாதியே பெற்றிருந்த பொருளை அஃது அன்ன தாதலை உணர்ந்து, வியத்தல். இதனானே, `சுத்தாவத்தையே இயற்கை` என்பதும், `கேவலமும், சகலமும் மலங்களாகிய உபாதியான் ஆக செயற்கைகள்` என்பதும் விளங்கும். இக்கருத்தே பற்றித் திரு வள்ளுவரும், வீட்டு நிலையை, `பேரா இயற்கை`3 என்றார். எய்துதற்குச் செயப்படு பொருள், `வெளி` என்ற குறிப்பால் பெறப்பட்டது. `எய்தும்` எனக் காலம் வினை முதல் போலக் கூறப்பட்டது.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு உண்மையாற் கூறப்பட்டது.