ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும்
`அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.

English Meaning:
All Higher Experiences Come to Jiva By God`s Grace

The states of Bondage (Boddha), of Liberation (Mukti)
Of Turiya, and Suddha-atita
—All these, the Jiva will subtle experience;
By Lord`s Grace they come;
And when that knowledge by Grace dawns,
Neither thought nor action
The Jiva any more has.
Tamil Meaning:
`பெத்தம், முத்தி` - என்பவற்றையும், `சாக்கிர சொப்பன சுழுத்திகளுக்கு அப்பாலும், குறைந்த கருவிகளே செயற் படுகின்ற துரியம், ஒரு கருவியும் செயற்படாத துரியாதீதம் ஆகிய அவத்தைகள் உள` என்பதையும் அறியாமலே உயிர், அவத்தைகளை அனுபவித்து வருகின்றது. ஆயினும், `அவையெல்லாம் சிவனது திருவருளால் இன்ன இன்னவாறு நிகழ்கின்றன` என்பதை அவனது அருளாலே அறிந்த பின், உயிருக்குத் தற்போதம் இல்லை. அஃது இல்லையாகவே, அதற்குத் தனக்கென யாதொரு செயலும் இல்லை.
Special Remark:
``சுத்தம்`` என்றது கருவிகள் அனைத்தும் ஒடுங்கிய ஒடுக்கத்தைக் குறித்தது. துரியமும், அதீதமும் அறிதற்கு அரியனவாம். ``தோன்றாமல்`` என்பது வழக்கு முறையால், ``தோன்றப் பெறாமல்`` எனப் பொருள் தந்தது. ``தான்`` என்றது உயிரை. உண்டல் - அனுபவித்தல். ``அறிந்த பின்`` எனக் கூறிப் பின் நிகழ்ச்சியை உணர்த் -தினமையால், `அதற்குமுன் கூறப்பட்டவை அறிதற்கு முற்பட்ட நிகழ்ச்சி` என்பது விளங்கிக் கிடந்தது. ஆகவே, ``அனுபவிக்கும்`` எனக் கூறப்பட்ட அவத்தைகள் பெத்த அவத்தைகள் - என்பதும், `அறிந்த பின் நிகழ்வன மத்தியவத்தைகள்` என்பதும் போந்தன. `தான்` என்றது திரோதான சத்தியை - எனக் கொள்கின்றவர்கள், `சுத்த துரியாதீதத்தையும் அது மறைக்கும், என உரைத்தல் வியப்பிற்குரியது.
இதனால், பலவாகக் கூறப்பட்ட அவத்தைகள் எல்லாம் பெத்த அவத்தை, முத்தி அவத்தை என இரண்டாய் அடங்குதலும் அவற்றுள் பெத்த அவத்தைகள் மலங்களாலும் அவத்தைகள் திருவருளாலும் நிகழ்தலும் கூறப்பட்டன.