
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும்
`அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.
English Meaning:
All Higher Experiences Come to Jiva By God`s GraceThe states of Bondage (Boddha), of Liberation (Mukti)
Of Turiya, and Suddha-atita
—All these, the Jiva will subtle experience;
By Lord`s Grace they come;
And when that knowledge by Grace dawns,
Neither thought nor action
The Jiva any more has.
Tamil Meaning:
`பெத்தம், முத்தி` - என்பவற்றையும், `சாக்கிர சொப்பன சுழுத்திகளுக்கு அப்பாலும், குறைந்த கருவிகளே செயற் படுகின்ற துரியம், ஒரு கருவியும் செயற்படாத துரியாதீதம் ஆகிய அவத்தைகள் உள` என்பதையும் அறியாமலே உயிர், அவத்தைகளை அனுபவித்து வருகின்றது. ஆயினும், `அவையெல்லாம் சிவனது திருவருளால் இன்ன இன்னவாறு நிகழ்கின்றன` என்பதை அவனது அருளாலே அறிந்த பின், உயிருக்குத் தற்போதம் இல்லை. அஃது இல்லையாகவே, அதற்குத் தனக்கென யாதொரு செயலும் இல்லை.Special Remark:
``சுத்தம்`` என்றது கருவிகள் அனைத்தும் ஒடுங்கிய ஒடுக்கத்தைக் குறித்தது. துரியமும், அதீதமும் அறிதற்கு அரியனவாம். ``தோன்றாமல்`` என்பது வழக்கு முறையால், ``தோன்றப் பெறாமல்`` எனப் பொருள் தந்தது. ``தான்`` என்றது உயிரை. உண்டல் - அனுபவித்தல். ``அறிந்த பின்`` எனக் கூறிப் பின் நிகழ்ச்சியை உணர்த் -தினமையால், `அதற்குமுன் கூறப்பட்டவை அறிதற்கு முற்பட்ட நிகழ்ச்சி` என்பது விளங்கிக் கிடந்தது. ஆகவே, ``அனுபவிக்கும்`` எனக் கூறப்பட்ட அவத்தைகள் பெத்த அவத்தைகள் - என்பதும், `அறிந்த பின் நிகழ்வன மத்தியவத்தைகள்` என்பதும் போந்தன. `தான்` என்றது திரோதான சத்தியை - எனக் கொள்கின்றவர்கள், `சுத்த துரியாதீதத்தையும் அது மறைக்கும், என உரைத்தல் வியப்பிற்குரியது.இதனால், பலவாகக் கூறப்பட்ட அவத்தைகள் எல்லாம் பெத்த அவத்தை, முத்தி அவத்தை என இரண்டாய் அடங்குதலும் அவற்றுள் பெத்த அவத்தைகள் மலங்களாலும் அவத்தைகள் திருவருளாலும் நிகழ்தலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage