ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.

English Meaning:
Sat, Asat and Sat-Asat Nature of Suddha, Kevala, Sakala States

He who cognises the Self
Is in Suddha State;
He who not
Is in Kevala;
He who cognises in distracting differences
Is in Sakala;
In Sat (Real), Asat (Unreal) and Sat-Asat (Real-Unreal)
They respective conjoin;
Each, according to his cognising state.
Tamil Meaning:
தத்துவங்களையும், அவற்றின் நீங்கியவழித் தன்னையும் அறிதலை விடுத்துச் சிவத்தை அறிகின்ற சுத்த நிலையை அடைந்தவனும், அவ்வாறின்றி, `தத்துவம், சிவம்` என்ற இரண்டையும் அறியாது, ஆணவம் ஒன்றிலே மட்டும் அழுந்தி யிருக்கின்ற, தனது அநாதியியல்பை உடையவனும், இவ்விருவரின் வேறாய்த் தத்துவங் -களை அறிந்து நிற்பவனும் தம்தம் ஆற்றலுக்கு ஏற்ப முறையே, சத்து, அசத்து, சதசத்து ஆகிய பொருள்களில் பொருந்தியிருப்பர்.
Special Remark:
இங்ஙனம் அநுவாத முகத்தால் கூறியதனானே, `கேவலம், சகலம், சுத்தம்` என்பன காரண அவத்தைகள்` என்பதும், அவற்றின் இயல்புகளும் பெறப்பட்டன.
அவற்றின் இயல்புகளாவன, ஆன்மா அநாதியில் ஆணவ மலத்தோடு மட்டும் பொருந்தி, இருளில் மூழ்கியிருந்த நிலை கேவலம். எனவே, பிற்காலங்களிலும் கருவி கரணங்களின் நீங்கி, ஆணவ மலத்தோடு மட்டும் இருத்தலும் கேவல நிலையேயாதல் விளங்கும். கீழாலவத்தை மத்தியாலவத்தைகளிலும் இந்நிலை இடையிடையே வருவதாம்.
ஆன்மா மாயா காரியங்களாகிய தத்துவங்களோடு கூடியச் சிறிதே அறிவு பெற்று உலகத்தை அறிந்து நிற்கும் நிலை சகலம். யோகா வத்தையும் கருவிகரணங்களின் வழி நிகழ்வனவேயாகலின் சகலமேயாம்.
ஆன்மா மும்மலங்களினும் நீங்கிச் சிவத்தையே அறிந்து நிற்கும் நிலை சுத்தம் என்க. சகலத்திலும் இது நிகழ்வதாயினும் அது நிறைவுடையதன்று.
`தன்` என்பது முன்னர்ச் சிவத்தையும், பின்னர் ஆன்மாவையும் குறித்தன. `சுத்தன்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. `சத்தாவது நிலைத்ததும், அசத்தாவது நிலையாததுமாம்` என்றற்கு, ``மன்னிய சத்து` என்றார். ஆணவம் முத்தியில் சத்தி கெட்டு நிற்றலால், `அசத்து` என்றார். தத்துவங்களில் இங்குத் தனு கரணங்களையே `சதசத்து` என்றார். சதசத்தாவது உயிரே ஆயினும், சகல நிலையில் தத்துவங்களையே உயிராக உணரும் நிலை உளதாதல் பற்றி அவ்வாறு கூறினார். `தொழில்` என்றது, அதற்கு ஏதுவாய ஆற்றலை. `தத்தம் தொழிலளவாகவே துன்னுவர்` என்க.
இதனால், `இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காரண அவத்தைகள் இவை` என்பதும், அவற்றின், இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.