ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.

English Meaning:
Souls are Ranked According to the Number of Malas They Possess

The Kevalas (Vijnanakalas) are inert
With Anava alone possessed;
The Pralayakalas have Maya
In addition;
They see with form unseen;
The Sakalas are Souls
In all three Malas steeped.
Tamil Meaning:
ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக் காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். இரு மலம் உடையவராகிய பிரளயாகலர் கேவலா வத்தையை அடையும் பொழுது வித்தியாதத்துவத்தின் முடிவாகிய மாயாதத்துவம் அவர்கட்கு அனுபவப்பொருளாகும். போக்கிய காண்டமாய்த் தூலமாய் உள்ள பிரகிருதிக் காரியங்களை உடைய சகலர் கேவலாவத்தையை அடையும் பொழுது காரணமாகிய பிர கிருதியையே பற்றிக்கொண்டு, அதன் காரியப் பொருள்களில் ஒன்றையும் அனுபவித்தல் இன்றியிருப்பர், இனிச்சகலாவத்தை சகலர்கட்கே உளதாகும்.
Special Remark:
`ஒன்றும்` - என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது. இரண்டாம் அடியோடு இயைய, முதல் அடியின் ஈற்றிலும், `ஆவர்` என்னும் ஆக்கம் வருவிக்க. விஞ்ஞானகலர்க்கும் சுத்த மாயை உளதாயினும் அதனால் செலுத்தப்படும் அசுத்த தத்துவங்கள் அவர் கட்கு இல்லாமையால், `கேவலத்தில் அனுபவம் இல்லை` என்றும், ஏனையோர்க்குப் பிரேரக காண்டம், போசயித்திரு காண்டம்` -என்பவை இருத்தலால் அவர்கட்கு `கேவலத்தில் அனுபவம் உண்டு` என்றும், `சகலர்` என்பதில், `கலை` எனப்படுவது பிரகிருதியே யாகையால், `சகலர்க்கு மட்டுமே சகலாவத்தை உண்டு` என்றும் கூறினார். `கேவலம்` என்பது பின்னும் சென்றியைந்தது. காணும் உருவம் - காணப்படுகின்ற தூலப்பொருள். `காணாமை` என்பதில், காணுதல் - அனுபவித்தல். காணாமை, காணும் உருவத்தைக் காணாமை. பூணும் - பற்றாகும்.
இதனால், காரண அவத்தைகள் பொதுவாகச் சொல்லப் படினும் அவை அவ்வவ்வுயிர்களின் பந்த வேறுபாட்டிற்கு ஏற்ப வேறுபட்டு நிகழ்தல் கூறப்பட்டது.