ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம்
உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து)
உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.

English Meaning:
36 Tattvas Reckoned as (5) Pure, (7) Pure Impure and (24) Impure.

Of Tattvas,
Six times four are Asuddha (Impure)
Seven are Suddha-Asuddha (Misra or Pure-Impure)
Five with Pure Maya are Suddha (Pure)
These in three divisions are thus parted
As Suddha (Pure), Suddha-Asuddha (Pure-Impure), And Asuddha (Impure)
All these with Jiva at appropriate stages stand.
Tamil Meaning:
முப்பத்தாறு தத்துவங்களில் கீழ் உள் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்த தத்துவங்களாகும். அவை அவ் வியத்தமாகிய மூலப்பிரகிருதியினின்றும் நோறி ஒடுங்கும். இடையில் உள்ள வித்தியா தத்துவம் ஏழும் மிச்சிர தத்துதவமாகும். அவை அசுத்த மாயையினின்றும் தோன்றி ஓடுங்கும். மேலே உள்ள சிவ தத்துவம் ஐந்தும் சுத்த தத்துவங்களாகும். அவை சுத்த மாயை யினின்றும் தோன்றி ஒடுங்கும். இம் மூவகைத் தத்துவங்களும் மூன்று காண்டங்களாய்ப் பிரிந்து ஆன்மாவோடு கூடி, அதற்கு அறிவிச்சை செயல்கள் நிகழக் கருவிகளாய் நிற்கும்.
Special Remark:
மூன்று காண்டங்களாவன; `போக்கிய காண்டம், போசயித்திரு காண்டம், பிரேரககாண்டம்` என்பன. இவற்றை ஆன்ம தத்துவம் முதலாக வைத்துப் பொருத்திக் கொள்க. போக்கியம் - புசிக்கப் படுவது. போசயித்திரு - புசிப்பவன். பிரேரகம் - செலுத்துதல். இவற்றை இவ்வாறே,
``ஐந்து சுத்தத்தின் கீழ், ஏழ் சுத்தாசுத்தம்; அசுத்தம்
தந்திடும் புமான்கீழ் எண்மூன் றாய தத்துவம்; சீவற்கு
வந்திடும்; பிரேரகாண்டம், மருவு போசயித்திரத்தோடு
அந்தமில் அணுக்களுக்குப் போக்கிய காண்ட மாமே``3
என சிவஞானசித்தியில் கூறப்பட்டமை காண்க.
`மாயேயம்` என்று உள்ள இடங்களில் எல்லாம் `மாமாயை` என்றே பாடம் திரிக்கப்பட்டது போலவே, `போசயித்திரு காண்டம்` என்று உள்ள இடங்களில் எல்லாம், `போகசயித்திரு காண்டம்` என்றே பாடம் திரிக்கப்பட்டுள்ளது.
அவ்வியத்தமாகிய மூலப்பிரகிருதி பல சமயத்தாராலும் நன்கறியப்பட்டது ஆதலின் அதனை `அதின்` எனப் பண்டறிசுட்டாற் கூறினார். `உறும்` என்பதை `அதின்` என்பதனோடும் கூட்டுக. உறுதல் - சூக்குமமாய்ப் பொருந்தியிருத்தல். எனவே அது, தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் உளதாம் நிலையாதல் அறிக. `ஏழ் சத்தா சுத்தம்; மாயையின் உறும்` என இயைக்க. `உறுமால் மாமாயையின்` என்பதனையும் `சுத்தம்` என்பதன் பின்னர்க் கூட்டி, `உறும் ஆன்மாவினோடே` என்பதை மீட்டும் மூன்றாம் அடியின் இறுதியில் கூட்டி யுரைக்க. காண்டம் - பகுதி.
இதனால், தத்துவம் முப்பத்தாறும் பற்றிய சில சிறப்பியல்புகள் கூறப்பட்டது.