ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

அனாதி பசுவியாத் தியாகும் இவனை
அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு)
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.

English Meaning:
How Suddha State is Reached

Eternal is he, Jiva; pervasive too is he;
Immersing him in Eternal Malas five,
The Lord lifts him
From the Primordial Kevala State
And consigns to Sakala State,
Thence,
Freed from unceasing whirl of birth
The Jiva, Suddha State reaches.
Tamil Meaning:
அனாதியே பாசத்துட்பட்டுப் பசுத்தன்மை எய்தி நின்ற இந்த உயிரை, அனாதியாயும், ஆதியாயும் வந்த ஐந்து மலங்களால் ஆட்டிப் படைப்பவன் சிவன். அவன் அனாதியில் கேவல நிலையிலிருந்த உயிரை சகல நிலையில் கொணர்ந்துவைத்துப் பின்பு அனாதியாய பிறப்பு ஒழியும்படி சுத்தாவத்தையில் சேர்ப்பான்.
Special Remark:
முதல் அடியில் `அனாதியில்` என ஏழாவது விரிக்க. `பசுவாய்` என்னும் ஆக்கச் சொல்தொக்கது. `வியாத்தியாய்ப் பசுவாகும் இவனை` என மொழிமாற்றி உரைக்க. ஒன்றைத் தன்னுள் அடக்கியிருப்பது வியாபகப் பொருள்; ஒன்றில் தான் அடங்கி யிருப்பது வியாப்பியப் பொருள். அடங்குதலும், அடக்குதலும் இன்றிச் சமமாய் இருப்பது வியாத்தி (வியாப்தி) பொருள். `அனாதி யாய், இல்லாய் வந்த` என இரண்டிலும் ஆக்கம் வருவித்து உரைக்க. அனாதியில்லாய் வருதலாவது, ஆதியாய் வருதல். அனாதியாய் வந்தது ஆணவம். ஆதியாய் வந்தவை மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி. `ஆட்டி` என்பது பெயர். ஆட்டுமாறு பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. `ஆட்டி - இட்டு, ஆக்கும்` என முடிக்க. `ஆகும்` என்பது பாடம் அன்று. `கேவலனை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப் பட்டது. `வித்தினின்று` மரம், மரத்தி -னின்றும் வித்து என்பது போல, `வினையால் பிறப்பு, பிறப்பால் வினை` என இவ்வாறு முதல் அறியப்பாடது தொடர்ந்து வருதலின் பிறப்பை `அனாதி` என்றார்.
இதனால், `கேவலம் ஆணவத்தின் செயல்` என்பதும், `சலகமும், சுத்தமும் சிவன் செயல்` என்பதும் கூறப்பட்டன.