ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர்
ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே

English Meaning:
Sakalas Can Attain God-Knowledge

They of Five Malas are Sakalas,
They of Five Malas are Pasa bound
They of Five Malas rule
The Celestial world of Svarga
They of Five Malas can (ultimate) attain God-Knowledge.
Tamil Meaning:
ஐந்து மலங்களையுடையவர்களாகச் சொல்லப் படுவோர் யாவரும் அதிகமான மாயைத் தொடக்கு உடையவர்கள். அவர்கள் அசுத்த வினையிலும் நீக்குதற்கரிய தூல வினைத் தொடக்குடையவர்கள். அத்தன்மைத்தான வினைத்தொடக்கால் சுவர்க்க நரகங்களை அடைந்து உழல்பவர்கள். ஆகையால், அவர்கள் சிவனை எளிதில் அறியும் அறிவுடையராவாரோ! `ஆகார்`.
Special Remark:
`அதனால், அவர்கட்குச் சிவன் தன்மையிலும், முன்னிலையிலும் தானே நேர்நின்று ஞானத்தை உணர்த்தாமல், படர்க்கையில் ஆசான் மூர்த்தியை அதிட்டித்து நின்று, பலநாள் உடன் கொண்டு, கேட்பித்தும், சிந்திப்பித்தும், தெளிவித்தும் ஞானத்தை உணர்த்துவன்` என்பது குறிப்பெச்சம். `ஆகவே, இவர்கள் சுத்தாவத்தையை அரிதில் எய்துவர்` என்பதாம்.
முன் இரண்டடிகளில், `ஐம்மலத்து ஆரும்` எனப் பிரித்து இரண்டாம் வேற்றுமைப் பெயர்த் தொகையாகக் கொள்க. `அதிகரித்த` என்பது, `அதித்த` எனக் குறைந்து நின்றது. `சகலர்` என்பது, `மாயையோடு கூடினவர்` எனப் பொருள் தரும் ஆதலின், `அதிகரித்த சகலர்` என்பது, பெரிதும் மயக்கத்தைத் தருகின்ற, முக்குண வடிவாகிய பிரகிருதி பந்தத்தை உடையவர் ஆதலைக் குறித்தது. `அரனார்க்கு` என்றது, `அரனாரை அறிவதற்கு` என்றபடி. ஏகார வினா, எதிர்மறைப் பொருளில் வந்தது.
இதனால், சுத்தாவத்தை பற்றியதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.