ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

பதிகங்கள்

Photo

தாவிய மாயையில் தங்கும் பிரளயர்
மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர்
ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.

English Meaning:
Who Are the Pralayakalas

Pralayakalas in Maya (Asuddha) world abide;
Of Maya their bodies are in main;
Of comelines eternal are they;
The Srikanta
And the eight and hundred Rudras;
—(These the Pralayakalas are.
Tamil Meaning:
மாயை ஒழிந்த ஏனை இரு மலங்களையுடைய `பிரளயாகலர்` என்போர் பிரகிருதியைக் கடந்த மாயாதத்துவத்தில் இருப்பர். அதனால் இவர்களது தனு கரணாதிகள் பிராகிருதம் ஆகாது. மாயேயமேயாம். (எனவே, `மாயையின் நீங்கினார்` என்பது, `பிரகிருதியின் நீங்கினார்` என்பதேயாம். ஆகவே, இவர்கள் சகலரினும் மேம்பட்டவர்கள், சிவனை ஒரு போதும் அறியாது மயங்குவாரல்லர்.) மாயையின் நீங்கினாராயினும் கன்மம் நீங்கப் பெறாதவர்கள். (இவர்களுக்கு உள்ள கன்மம் சூக்கும கன்மமே.) அனந்த தேவர் வழிநின்று குணமூர்த்திகளை ஏவிப் பிரகிருதி மாயையில் காரியங்களைச் செய்விக்கும் சீகண்ட ருத்திரர், மற்றும் பிரகிருதி தத்துவத்தில் உள்ள நூற்றெட்டுப் புவன ருத்திரர்கள் ஆகியோர் இப்பிரளயாகலர் வருக்கத்தைச் சேர்ந்தவர்களே.
Special Remark:
இவ்வுருத்திரர்களைப்பற்றிச் சிவஞானபோதம் சூத்திரம் இரண்டு, அதிகரணம் மூன்றின் மாபாடியத்தால் அறிக. தானிய கடந்த, `பிரளயர் மிக்குள்ளனர்` என இயைக்க. மேவிய மேவப்பட்ட. `மாயையில் தங்கும் பிரளயர்` என்ற அனுவாதத்தானே. `அவர் மாயையில் தங்குவர்` என்பது பெறப்பட்டது. மற்று, அசை. அது - முன்னர்க்கூறிய மாயை. ``உடம்பு`` எனத்தனுவையே கூறினா ராயினும், இனம்பற்றிக் கரணம் முதலியனவும் கொள்ளப்படும். `ஒன்றிய - கீழ் உள்ளாரோடு பொருந்திய` என உரைக்க. `சீகண்ட உருத்திரரே சகலர்கட்குப் பரம்பொருளாய் எல்லாவற்றையும் அருளுபவர்` என்பது சிவாகாமங்களில் சொல்லப்படுவது. `கைலாச பதியாய் உள்ளவர் இவரே` என்பதும் அத்தகையது. அதனால், இவர் பிரளயாகலருள் பக்குவராய்ச் சிவனருளைப் பெற்றவர் என்க. `ஆவயின் உள்ளார்` என ஒரு சொல்வருவித்து, அத் தொடரை, `கன்மத்தர்` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``தாவிய மாயையில் தங்கும் பிரளயர்`` என்றதனால், அவருக்குச் சகலாவத்தை உண்டாகாமை பெறப்பட்டது. கேவலாவத்தை சுத்தாவத்தைகள் எல்லார்க்கும் உள்ளது.
இதனால், சகலாவத்தை இல்லாதவருள் ஒருசாராரது இயல்பும், `அன்னார் இவர்` என்பதும் கூறப்பட்டன.